சசியின் இடைக்கால பொதுச்செயலர் பதவியே செல்லாது... இரட்டை இலை கிடைக்கும்: நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம்
சசிகலாவின் இடைக்கால பொதுச்செயலர் பதவியே செல்லாது; இரட்டை இலையும் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.
டெல்லி: அதிமுக கட்சி விதிகளின்படி சசிகலா இடைக்கால பொதுச்செயலராக முடியாது; ஆகையால் சசிகலா தலைமையிலான அணிக்கு இரட்டை இலை கிடைக்காது என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் அதிமுக இருக்கிறது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக நீடிக்க முடியுமா? ஆகியவை தொடர்பான இறுதி முடிவை இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதற்காக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுகவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாயத்து தொடங்குகிறது. இந்த விசாரணையின் முடிவில் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.

பொதுச்செயலர் இல்லாத நிலையில்...
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலர் இல்லாத நிலையில் முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை நடத்த முடியும்; இதன்படி பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்தான் கட்சியை வழிநடத்த முடியும். ஆகவே தாங்களே உண்மையான அதிமுக; எங்களுக்கே இரட்டை இலை சின்னம் என்பது ஓபிஎஸ் அதிமுக வாதம்.

யார் பொதுச்செயலர்?
அதேபோல் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலர் என்பவரை நியமனம் செய்ய முடியாது; இடைக்கால பொதுச்செயலர் என்பதே அதிமுக கட்சி விதிகளில் இல்லை; பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலராக நியமிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆகையால் அவரது இடைக்கால பொதுச்செயலர் நியமனமும் செல்லாது என்பதும் ஓபிஎஸ் அதிமுக விதி.

நம்பிக்கையில் ஓபிஎஸ் அதிமுக
அதிமுக விதிகளின்படி பார்த்தால் நிச்சயம் தாங்களே உண்மையான அதிமுக; தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது ஓபிஎஸ் அதிமுக.

உபி விவகாரத்தை ஒப்பிட முடியாது
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற பிரச்சனையில் பொதுச்செயலர் உயிரோடு இருந்ததால் சின்னம் யாருக்கு என்பது மட்டுமே சிக்கலாக இருந்தது. அதனால் பெரும்பான்மை நிர்வாகிகள் வசம் உள்ள அகிலேஷுக்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது. அதற்கும் அதிமுகவின் பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஓபிஎஸ் அதிமுக.












Click it and Unblock the Notifications