ஏடிஎம் மெஷினை உடைப்பது எப்படி...? இணையத்தில் கற்று திருட முயற்சித்த மாணவர் கைது
மும்பை: வங்கி ஊழியரைப் போலவே நடித்து ஏடிஎம்மைத் திருட முயற்சித்த கல்லூரி மாணவரை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மாணவர், ஆன்லைனில் வங்கி ஊழியர்களைப் போலவே ஏடிஎம்மைத் திறந்து பணம் எடுப்பது எப்படி என கற்றுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 19 வயது பி.காம் மாணவரான அன்சாரிக்கு குறைந்த வயதிலேயே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால், பணம் சம்பாதிப்பதற்கு அன்சாரி தேர்வு செய்ததோ தவறான வழியைத் தான்.
வங்கி ஊழியர்கள் போலவே ஏடிஎம்மை உடைக்காமல் அதன் உள்ளே இருக்கும் பணத்தை லாவகமாக திருட வேண்டும் என முடிவு செய்துள்ளார் அன்சாரி. எனவே, கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக இணையத்தில் தகவல்களைத் திரட்டியுள்ளார்.
இணையம் வாயிலாக ஏடிஎம்மை சுலபமாக திறப்பது எப்படி எனக் கற்றுக் கொண்ட அன்சாரி, மும்பை டியோனர் பகுதியில் உள்ள சங்கரா நகர் ஏடிஎம்மில் திருடுவது என முடிவு செய்தார். கடந்த சில தினங்களாக அந்த ஏடிஎம்மின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என ஆய்வு செய்துள்ளார் அன்சாரி.
பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி, திருடுவதற்கு ஏற்றது அந்த ஏடிஎம் என முடிவு செய்த அம்மாணவர், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஏடிஎம்மிற்குள் நுழைந்துள்ளார். இணையத்தில் கற்ற தகவல்களின் படி சாமர்த்தியமாக ஏடிஎம் மிஷினைத் திறந்து பணத்தை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அவ்வழியே ரோந்து வந்த போலீசார், ஏடிஎம் மிஷின் திறந்திருப்பதையும் மாணவர் அமர்ந்திருப்பதையும் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். இது தொடர்பாக அம்மாணவரிடம் விசாரணையும் நடத்தியுள்ளனர்.
ஆனால், போலீசைக் கண்டு சற்றும் அசராத அன்சாரி, ‘தான் வங்கி ஊழியர் என்றும், மிஷினை சரி செய்து கொண்டிருப்பதாகவும்' போலீசில் தெரிவித்துள்ளார். மேலும், கண்காணிப்பு கேமராவிற்கு முன்னதாகவே யாராவது திருடுவார்களா? என போலீசிடம் கேள்வி கேட்டுக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்துள்ளார்.
ஆனபோதும், அன்சாரியின் பதிலில் திருப்தி அடையாத உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அதன் மூலம் வங்கியிலிருந்து ஏடிஎம்மிற்கு ஊழியர்கள் யாரும் அனுப்பப் படவில்லை என போலீசார் உறுதி செய்தனர்.
உடனடியாக ஏடிஎம் உள்ளே சென்ற போலீசார் அன்சாரியைக் கைது செய்தனர். அம்மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இணையம் வாயிலாக ஏடிஎம் மிஷினைத் திறப்பது எப்படி என கற்றுக் கொண்டதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் இது போன்ற தொழில் நுட்பங்கள் சமயத்தில் இது போன்ற தீய எண்ணங்களையும் வளரும் தலைமுறையிடம் வளர்த்து விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications