தன் சீட்டைத் தூக்கி சாமியாருக்குக் கொடுத்த சந்திரசேகர ராவ்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அதிகார நாற்காலியில் சாமியாரை உட்கார வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தான் புதிதாக குடிபெயர்ந்துள்ள குண்டு துளைக்காத வீட்டில் உள்ள அலுவலக நாற்காலியில் சாமியார் ஒருவரை உட்கார வைத்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசுவதும் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 9 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் சதுர அடியில் குண்டு துளைக்காத வகையில் 50 கோடி ரூபாய் செலவில் புதிய வீட்டை கட்டி இன்றுதான் குடிபெயர்ந்துள்ளார். அதற்குள் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
அதாவது குடிப்பெயர்ப்பு விழாவுக்கு சின்ன ஜீர் சுவாமி என்ற சாமியார் தனது சீடர்களுடன் தலைமை தாங்கினார். அலுவலகம் சேர்ந்து கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீட்டை அவருக்கு முதல்வர் சந்திர சேகர ராவ் மிக பவ்யமாக சுற்றிக் காட்டினார்.
அப்போது தனது அலுவலகத்தில் உள்ள முதல்வருக்கான அதிகாரபூர்வ நாற்காலியில் சந்திர சேகர ராவ் சாமியாரை அமரச் செய்து அழகு பார்த்தார். புகைப்படங்கள் வாயிலாக இதனைக் கண்ட அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் நாற்காலியில் சாமியாரை உட்கார வைத்து சந்திரசேகர ராவ் முதல்வர் பதவியை அவமிதித்து விட்டதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
முதல்வருக்கான நாற்காலியில் சந்திர சேகர ராவ் சாமியாரை உட்காரச் செய்தது அரசியலமைப்பை அவதிமதிப்பது மட்டும் அல்லாமல் ஜனநாயகத்தை எதிரானதாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி இல்லாத நேரத்தில் அவரது இருக்கையில் அமர்ந்ததற்காக ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.