ஆண் காக்கிக்குள் சுரந்த தாய்மை.. அழுவதை விட்டு சிரித்த குட்டிப் பாப்பா.. வைரல் போட்டோ!
போலீஸ் ஒருவர் அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் போட்டோ வைரலாகி வருகிறது.
தெலங்கானா: தாய்மை பெண்ணிடம் மட்டுமல்ல... ஆணிடமும் ஏராளமாகவே கொட்டிக்கிடக்கிறது என்பதை பறை சாற்றி உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது ஒரு புகைப்படம்.
தெலங்கானாவில் நேற்று காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
14 வயது சிறுமி
அப்போது மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் ஜுனியர் கல்லூரியிலும் தேர்வு நடைபெற்றது. இதில் சமீபத்தில் பிள்ளையை பெற்ற இளம் தாய் ஒருவரும் தேர்வு எழுத வந்திருக்கிறார். பச்சிளம் குழந்தையை வீட்டில் விட்டுவிட முடியாமல் தன்னுடனே தூக்கி கொண்டு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு எழுதும் நேரத்தில் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக 14 வயது சிறுமியை அந்த இளம் தாய் உடன் அழைத்து வந்திருந்தார்.
குழந்தையின் அழுகை
தேர்வு தொடங்கியதும் அந்த இளம்தாய் தன் குழந்தையை அந்த சிறுமியிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதும் அறைக்கு சென்றுவிட்டார். ஆனால் குழந்தையை அந்த சிறுமி வாங்கியதிலிருந்தே வீல் என அலற தொடங்கியது. அந்த சின்னஞ்சிறு பெண்ணால் குழந்தையை சமாதானப்படுத்தவே தெரியவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தும், பேசி பார்த்தும் குழந்தை அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
குழந்தையை வாங்கி கொண்டார்
இதனை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒருவர் கவனித்து கொண்டே இருந்தார். முஜிபூர் ரஹ்மான் என்ற பெயருடைய அவர் மூசாபேட் போலீஸ் ஸ்டேஷன் ஹெட்-கான்ஸ்டபிளாக இருக்கிறார். குழந்தையின் அழுகை சத்தம் அவரை என்னமோ செய்தது. பிறகு விரைந்து சென்று சிறுமியிடம் அழும் குழந்தையை வாங்கிக் கொண்டார்.
|
கொஞ்சிய போலீஸ்
குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு தெரிந்த வித்தையெல்லாம் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படுத்தி குழந்தையின் அழுகையை நிறுத்தினார். அந்த இளம் தாய் தேர்வு எழுதி முடிக்கும்வரை குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டும், சமாதானப்படுத்திக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் இருந்தார் அந்த போலீஸ்!!
காக்கிக்குள் ஒரு ஈரம்
இந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை தெலங்கானா ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஸ்வரி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றி போலீஸ் முஜிபூர் ரஹ்மான் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் மக்களுக்காக தான் பணி புரிகிறோம். எங்களைவிட மக்கள்தான் முக்கியம்" என்றார். காக்கிச் சட்டைக்குள் கடமையுடன் கலந்த ஒரு ஈரமும் இருக்கத்தான் செய்கிறது!!