'தெலுங்கானாவை' அட்வான்ஸாக உருவாக்கி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அதிகாரப்பூர்வமாக உருவாகப் போவது என்னவோ ஜூன் 2ந் தேதிதான்.. ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கு முன்னரே தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளுக்கு தனித் தனியே சட்டசபை, லோக்சபா தேர்தல்களை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் லோக்ச்பா தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12 வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அத்துடன் ஆந்திரா, ஒடிஸ்ஸா, சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆந்திராவில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

ஏப்ரல் 30ல் தெலுங்கானா தேர்தல்
அதாவது தெலுங்கானா பகுதியில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

மே 7-ல் சீமாந்திரா தேர்தல்
சீமாந்திரா பகுதியில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தனித்தனியே பிரிப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகள் தனித்தனி வண்ணமிடப்பட்டு மாநில வரையறையும் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர் சம்பத், தற்போது "ஆந்திரா" என்ற மாநிலத்துக்கான தேர்தல் நடைபெற்றாலும் மாநில பிரிவினையின் போது தெலுங்கானாவில் இணையும் தொகுதிகளைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா மாநில பிரதிநிதிகளாக அப்படியே மாறிக் கொள்வர் என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications