பேச்சுவார்த்தை தோல்வி! தொடர்ந்து இருளில் சீமாந்திரா! ரயில் சேவை, மருத்துவமனைகள் கடும் பாதிப்பு!!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா மின்சார வாரிய ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தைக் கைவிடக் கோரி ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நடத்திய இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் தொடர்ந்தும் கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திரா இருளில் மூழ்கியுள்ளது.
தெலுங்கானா உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. ஆனால் மத்திய அமைச்சரவையும் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தெரிவித்ததால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. உச்சகட்டமாக 30 ஆயிரம் மின்சார வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் குதித்ததால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
மின்சார வாரிய ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் தொடர்ந்தும் சீமாந்திராவில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில்..
மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாததால் இன்குபேட்டர்கள் இயங்கவில்லை. அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்று பிறந்த பல குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

விமான நிலையங்கள்..
பேக்அப் மின்சாரம் மூலமே சீமாந்திராவில் உள்ள திருப்பதி, விசாகப்பட்டினம் விமான நிலையங்கள் நேற்றும் இயங்கின. இவை எந்த நேரத்திலும் மூடப்படக் கூடிய அபாயம் இருக்கிறது

ரயில் சேவைகள்..
சீமாந்திராவில் மின்சார உற்பத்தி முடங்கியதால் ரயில் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சேவை
மின்சாரம் இல்லாததால் சீமாந்திராவில் செல்போன் சேவை முழுமையாக முடங்கிப் போயுள்ளது.

பேருந்துகள் நிறுத்தம்
சீமாந்திராவில் பெட்ரோல் பங்குகளும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சுமார் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.

தென்மாநிலங்களுக்கும் பாதிப்பு
சீமாந்திராவில் 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தென் மத்திய தொகுப்புக்குரிய பொது மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில அரசுகள் நிலைமையை சீர்செய்ய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

ஊதியம் இல்லாமலேயே...
70 நாட்களாக போராடி வரும் சீமாந்திரா அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை..

தொடரும் உண்ணாவிரதங்கள்..
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத்திலும், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

காங்கிரஸ் அடம்
இத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் காங்கிரஸ் கட்சியோ, தெலுங்கானா அமைப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். சீமாந்திரா மக்கள்தான் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications