ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்... காங்- மஜ்லீஸ் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்- போலீஸ் தடியடி!
ஹைதராபாத்: தெலுங்கானாவின் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜ்லீஸ் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
காங்கிரஸுடன் நீண்டகாலம் கூட்டணி கட்சியாக நீடித்து வந்தது மஜ்லீஸ் கட்சி. தற்போது நடைபெற்றுவரும் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் பரம வைரிகளாக மோதி வருகின்றன.
பழைய ஹைதராபாத்தின் மீர்செளக் பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது கெளஸுக்கும் மஜ்லீஸ் எம்எல்ஏ பாஷா குவாதிரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உத்தம்குமார் ரெட்டி, ஹைதராபாத் மாநாகராட்சி காங்கிரஸ் தலைவர் சபீர் அலி ஆகியோர் மீர்செளக் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியும் அங்கு வந்தார். இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இருதரப்புக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் மோதலாகவும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் மஜ்லீஸ் கட்சியின் கூட்டு சதியால்தான் இத்தகைய பதற்றமே ஏற்பட்டது; அவர்களைப் பொறுத்தவரையில் மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.
எங்களை ஓவைசியும் அவரது ஆதரவாளர்களும் தாக்கினர். என்னுடைய காரை சேதப்படுத்தினர். எங்கள் மீதான இத்தாக்குதல் குறித்து தனியே புகார் கொடுத்துள்ளோம் என்றார். இதன் பின்னர் நேற்று மாலை டிஜிபி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்களைத் தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மற்றொரு இடத்தில் மஜ்லீஸ் கட்சியினர், தெலுங்கானா துணை முதல்வர் மமூத் அலியின் மகன் ஆசாம் அலியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மஜ்லீஸ் எம்எல்ஏ அகமது பலாலாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.