தீவிரவாதம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதே, இந்தியாவில் தோன்றியதல்ல: பிரணாப்
டெல்லி: இந்தியாவில் தீவிரவாதம் என்பது இந்தியாவில் தோன்றியதில்லை. இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்திய முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது என்பது கிட்டத்தட்ட கிடையாது. அப்படியே இருந்தாலும் அது நிராகரிக்கக் கூடிய அளவுக்கு மிக மிக சொற்பமான அளவேயாகும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரணாப், முன்னதாக அந்த நாட்டு ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் உருவானதல்ல தீவிரவாதம். இது வெளியிலிருந்து இறக்குமதியானது.
இந்திய முஸ்லீம்களின் எண்ணிக்கை 15 கோடியாகும். இதில் ஒருவர் அல்லது இருவர் வேண்டுமானால் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர்.

தீவிரவாதம் வெளியில் இருந்துதான் இந்தியாவில் ஊடுருவுகிறது. உள்நாட்டில் ஒருபோதும் தீவிரவாதம் உருவாவதில்லை. அப்படியே தோன்றினாலும் கூட அதன் அறிகுறிகள் தென்படும்போதெல்லாம் கடும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை வேரோடு களைந்து வருகிறோம்.
தீவிரவாதிகளுக்கு மதம், நாட்டுப்பற்று கிடையாது. அவர்களின் ஒரே நோக்கம், அழிவு, நாசம், மனிதர்களுக்கு எதிராக தீங்கு செய்வது மட்டுமே. தீவிரவாதம் 'இவரால்' செய்யப்பட்டால் தவறு, 'அவரால்' செய்யப்பட்டால் சரி என்று யாரும் கூற முடியாது. தீவிரவாதம் எங்கிருந்தாலும் தவறுதான்.
தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே தீவிரவாதத்தை ஒழிக்க உரிய வழிமுறையாகும். நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பதே அர்த்தமற்றது.
இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியாதான்.
அண்டை நாட்டுடன் பிரச்சினை இருக்கும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை, இருமுறை வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டுள்ளேன். அதே நேரம், சுதந்திரத்துக்கு பிறகு படிப்படியாக இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட்டு வந்துள்ளதை மறுக்க முடியாது.
சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தங்களின்படி நடந்து கொண்டாலே இந்த பிரச்சினைகளில் பல குறையும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications