காஷ்மீர் மருத்துவமனையில் பயங்கரம்.. போலீசாரை சுட்டுக்கொன்று பாக். கைதியை கடத்திய தீவிரவாதிகள்
காஷ்மீரில் பாகிஸ்தான் கைதி நவீத்தை மீட்க தீவிரவாதிகள் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் கைதி நவீத்தை மீட்க தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தானை சேர்ந்த கைதி நவீத் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சிகிச்சை பெற்று வந்த கைதி நவீத்தை மீட்க நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காவலரை சுட்டுக்கொன்று தீவிரவாதி நவீத் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டான். மேலும் அவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதிக்கு விரைந்த ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு மீட்டர் இடைவெளிக்கும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காஷ்மீரில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015ம் ஆண்டு காஷ்மீரின் தெற்கு பகுதியில் சுற்றித்திரிந்த நவீத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.