தோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்
ராஞ்சி: தேர்தல் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்க்கட்சிகள் காரணம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4-ம் கட்டமாக, ஜார்க்கண்டில் வருகிற 29 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த மாநிலத்தைப் பொருத்த வரை பாஜக, ஜேஎம்எம் கட்சியினரிடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் பிரிந்து சென்று, இத் தேர்தலில் லோக்ஜனசக்தியுடன் சேர்ந்து, போட்டியிடுவது பாஜகவுக்கு பலவீனமாக பார்க்கப்பட்டாலும், பிரதமர் மோடியின் பிரச்சாரம் இதை மாற்றி விடும் என பாஜக நம்புகிறது.
இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகள் இதுவரை என்னை அவதூறாக பேசி வந்தன. ஆனால் நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த துவங்கி உள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.
தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு சரியாக எழுதாவிட்டால், வீட்டிற்கு வந்து பேனா சரியாக இல்லை என்பது போன்ற காரணங்களை கூறுவது போல் தான் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை உள்ளது என்றார். மேலும், ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சில பகுதிகளில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை போல் தான் 2014 ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தியாவிலும் நடந்து வந்தன என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications