10 நகரங்களில் நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டம்- சென்னைக்கும் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறும் அது உஷார்படுத்தியுள்ளது.
10 நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகரங்களில் தீபாவளியையொட்டி தாக்குதல் நடைபெறலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாளை தீபாவளி
நாளை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்கள் கடைசி நேர பர்ச்சேஸில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
3 நாள் கொண்டாட்டம்
தமிழகத்தில் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம்தான். ஆனால் சில மாநிலங்களில் 3 நாள் கொண்டாட்டமாக இது நடைபெறும்.
தீவிரவாதிகள் சதிச் செயல்
இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நாசவேலைக்குத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
எங்கெங்கு வாய்ப்பு
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், நாக்பூர், புனே, ஹைதராபாத், அகமதாபாத், வதோதரா ஆகிய 10 நகரங்களில் கலவரத்தை தூண்ட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களில்
இந்த நகரங்களில் உள்ள புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் நாசவேலையை நிகழ்த்த தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உஷார் உஷார்
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுளை மத்திய உள்துறை தொடர்பு கொண்டு, தீபாவளி பண்டிகை நாட்களில் மிக, மிக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் போலீஸார் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.