பின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய்.. இந்தியா பாதுகாப்பு படையிலும் சேர்ப்பு!
உலகின் முக்கியமான நாட்டின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படும் பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய் இனங்கள் இந்தியாவிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.
Recommended Video
டெல்லி: உலகின் முக்கியமான நாட்டின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படும் பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய் இனங்கள் இந்தியாவிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.
தொடரும் தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்தும், உளவுத்துறையின் அறிவுரையை அடுத்தும் மத்திய அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு வாரங்களில் விமான நிலையங்களிலும் சந்தேகத்திற்கு இடமான இடங்களிலும் இந்த நாய் இனம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
இந்த நாய் இனத்திற்கு சில முக்கியமான வரலாறு இருக்கிறது. முக்கியமாக ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க இந்த நாய் அதிக அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.
எப்படிப்பட்டது இந்த பெல்ஜியன் மாலினாய்ஸ்
பொதுவாக பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய்கள் மிகவும் சாதாரணமாக அமைதியாக இருக்கும் . ஆனால், ஒருமுறை இந்த நாய்க்கு முறையான பயிற்சி கொடுத்துவிட்டால் அதை காலத்திற்கும் மறக்காமல் கடைசி வரை சிறப்பாக செயல்படும். மிக அதிக நுண்ணுணர்வு கொண்டு இந்த நாய் இனம் போதை பொருள் தொடங்கி வெடிகுண்டுகள் வரை 100 சதவிகித துல்லியத்துடன் கண்டுபிடிக்கும்.
எங்கெல்லாம் இருக்கிறது
இந்த நாய் இனத்தின் திறனை கண்டு சில முக்கியமான நாடுகள், தங்கள் பாதுகாப்பில் இதை பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் சிஐஏ, எஃப்பிஐ, பிரான்சின் காவல் துறை, இஸ்ரேல் காவல் துறை, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து விமான படை, ஸ்காட்லாந்து போதை பொருள் தடுப்பு பிரிவு, அதிக போதை பொருள் உலாவிய பிலிப்பைன்ஸ் போதை தடுப்பு பிரிவு ஆகிய நாடுகள், இந்த பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய் இனங்களை தங்கள் பாதுகாப்பு படையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆப்ரேஷன்
சரியாக பத்து ஆண்டுகள் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பே ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டார். 2011 மே 2ம் தேதி பாகிஸ்தானில் அபோத்தாபாத் என்ற இடத்தில் வைத்து இரவோடு இரவாக கொல்லப்பட்டார். இதில் ஒசாமா இருந்த பங்கர் அறையை கண்டுபிடித்தது, இந்த பெல்ஜியன் மாலினாய்ஸ் நாய்தான். சிஐஏ நடத்திய அந்த உலகின் பெரிய ஆப்ரேஷனில் மிக முக்கிய பங்கு வகித்தது இந்த நாய் இனம்தான்.
இந்தியா பாதுகாப்பு
இந்த நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பு படையில் இந்த நாய் இனம் சேர்க்கப்பட உள்ளது. அதன்படி சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் இந்த நாய் இனம் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன்பு இருக்கும் நாய்கள் நன்றாக பணி செய்தாலும் , பாதுகாப்பு கருதி இந்த நாய் இனம் சேர்க்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, மும்பை, டெல்லி, புனே விமான நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளது.