உத்தரப் பிரதேச மக்களுக்கு மேலும் 1.44 லட்சம் வீடுகள்! சாதித்து காட்டிய யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்திற்கு கூடுதலாக 1.44 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக அளவு இலவச வீடுகளை கட்டிக்கொடுத்த மாநிலம் எனும் சாதனையை உத்தரப் பிரதேச அரசு பெற இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் சுமார் 80 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மாநிலத்திற்கு புதிய திட்டங்களை யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு கூடுதலாக 1.44 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளின் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும். இத்துடன் சேர்த்து இதுவரை உ.பி அரசு சுமார், 21,68,674 வீடுகளை ஏழை எளிய மக்களுக்கு கட்டி கொடுத்திருக்கிறது. இந்த கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு குறித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் உத்தரப் பிரதேச ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் மூலம் ஒப்புதலை தெரிவித்திருந்தார். PMAY-G திட்டத்தின்படி தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் நடைமுறையானது கடந்த 2016ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக கணக்கெடுக்கப்பட்டு குறிப்பிட்ட மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் இதில் சிலருக்கு வீடுகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இரண்டாவது முறையாக கணக்கீடு நடத்தப்பட்டு முதல் தொகுப்பில் விடுபட்டவர்களின் பெயர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதனை உத்தரப் பிரதேச மக்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications