24 மணி நேரமும் "சோட்டா" பக்கத்திலேயே இருக்க வேண்டியிருக்கே.. புலம்பும் திகார் சிறை காவலர்கள்
டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா சோட்டா ராஜனைப் பாதுகாப்பது மிகப் பெரிய சுமையாக மாறியுள்ளது சிறைக் காவலர்களுக்கு. 24 மணி நேரமும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் புலம்புகின்றனர்.
10க்கு 5 என்ற சிறை அறையில் சோட்டா ராஜன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது அறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரைப் பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக மாறியுள்ளதாக திகார் சிறை காவலர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ரிஸ்க் எடுக்க முடியலை
2 நாட்களுக்கு ஒரு முறை சோட்டா ராஜன் பாதுகாப்பு குறித்து ஏதாவது ஒரு செய்தி உளவுத்துறையிடமிருந்தும், அரசிடமிருந்தும் வந்தவண்ணம் உள்ளதாம். அவரைப் பாதுகாப்பதில் ரிஸ்க் எடுக்க முடியாத நிலை இருப்பதாக காவலர்கள் கூறுகிறார்கள்.

சோட்டா ஷகீலால் ஆபத்து
சோட்டா ராஜனுக்கு மிகப் பெரிய ஆபத்தே அவரது முன்னாள் சகாவும், தாவூத் இப்ராகிமின் வலது கரமுமான சோட்டா ஷகீல்தான். உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று ராஜனுக்கு சவால் விட்டுள்ளார் ஷகீல்.

உள்ளே வைத்துப் போட வாய்ப்பு
தாவூத் கும்பலுக்கு நாட்டின் எந்த மூலையிலும் புகும் அளவுக்கு துணிச்சலும், செல்வாக்கும், ஆள் பலமும், படை பலமும் இருப்பதால் ஷகீலால், ராஜனுக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறது உளவுத்துறை.

ஸ்கெட்ச் போட்டு சுற்றும் ஷகீல்
சோட்டா ராஜனை போட்டுத் தள்ளும் திட்டத்துடன் சோட்டா ஷகீல், சமயம் பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஷகீல் வெற்றி பெற்று விட்டால் அது இந்தியாவுக்கே பெரும் அவமானமாகி விடும் என்பதால்தான் உளவுத்துறையும், திகார் சிறை நிர்வாகமும் அதிக கவனத்தை ராஜன் மீது வைத்துள்ளன.

டெல்லியில் வைக்க காரணம் இதுதான்
மும்பையில் சோட்டா ராஜனை காவலில் வைத்தால் அது மிகப் பெரிய ஆபத்தில்தான் போய் முடியும் என்பதால்தான் டெல்லியிலேயே அவரை திகார் சிறையில் அடைத்து பாதுகாத்து வருகிறது உளவுத்துறை.

சிறப்புக் கவனிப்பு
திகார் சிறையில் சோட்டா ராஜனுக்கு சிறப்புக் கவனிப்பு செலுத்தப்படுகிறது. விசேஷமாக சமைக்கப்படுகிறது. அதை அவருக்குக் கொடுப்பதற்கு முன்பு பரிசோதித்து பார்க்கின்றனர். அதிக அளவில் உடற்பயிற்சி செய்யுமாறு ராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவலுக்கு 10 பேர்
ராஜன் உள்ள அறைப் பகுதியில் 10 காவலர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர் வாக்கிங் போகும்போதும் கூட பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர். யோகா செய்யும்போதும் கூடவே காவலர்கள் உள்ளனர். அவர் உள்ள அறை கூட மற்ற அறைகளை விட்டு தள்ளியே உள்ளது.

தூர நின்றுதான் பேச முடியும்
யாரேனும் சோட்டா ராஜனை சந்தித்துப் பேச விரும்பினால், அதை சோட்டா ராஜன் அனுமதித்தால் மட்டுமே, தீவிரப் பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் கூட அவருக்கு சற்று தொலைவில் நின்றுதான் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications