கேரளப் பிரச்சாரத்தில் வான் மழையில் நனைந்த ராகுல்... தொண்டர்கள் மனதில் சாரல்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் ராகுல் நடந்து கொண்ட விதம் அவர்களது கட்சித் தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.
நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் ஆற்றிங்கல், செங்கனூர், காசர்கோடு, ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, பலத்த மழை பெய்ததால் நாற்காலிகளைக் குடைகளாக்கிய படி ராகுல் பேச்சை ரசித்தனர் தொண்டர்கள். ஆனால், விடாது பெய்த மழையிலும் அசராது நனைந்த படியே தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் ராகுல்.
மேலும், மழையில் நனைந்தபடியே தொண்டர்கள் அருகில் சென்ற ராகுல் அவர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனால், நேற்று மாலை சுமார் 3.30 மணிக்கு ஆற்றிங்கல் தொகுதியில் பேசுவதாக இருந்த பிரச்சாரக்கூட்டம், காலதாமதமாக 6.20 மணிக்கு தொடங்கியது.
அதேபோல், ஆற்றிங்கல் கூட்டத்தில் ராகுல்காந்தியின் ஆங்கில பேச்சை சசிதரூர் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அப்போது அவரது மைக் வேலை செய்யவில்லை. உடனே ராகுல்காந்தி, சாதாரண தொண்டரை போல் தனது முன்பு இருந்த ஒரு மைக்கை சசிதரூருக்கு கொடுத்து அவர் பேச உதவினார்.
செங்கனூர் கூட்டத்தில் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோதி விஜயகுமார் பேசும்போது, அவரது மைக்கையும் அவர் பேசுவதற்கு வசதியாக ராகுல்காந்தி சரிசெய்தார். இதற்காக ஜோதி தனது நன்றியை ராகுலுக்கு தெரிவித்தார். ராகுல்காந்தியின் எளிமையை பார்த்து கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
கடந்தமுறை ராகுல் கேரளா வந்தபோது, திரண்ட கூட்டத்தைவிட இந்த முறை அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications