சென்னை, ராஜஸ்தான் அணிகளை பி.சி.சி.ஐ.யே ஏற்று நடத்த திட்டம்? இன்றைய ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு
மும்பை : நீதிபதி லோதா கமிட்டியின் அதிரடித் தீர்ப்பு குறித்த விவரங்களை விவாதிக்கும் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பி.சி.சி.ஐ யே ஏற்று நடத்துமா என்பது குறித்த முடிவு தெரிய வரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதையடுத்து அதன் விளைவுகள் மற்றும் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கிய ஐபிஎல் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஆட்சிமன்ற குழு கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் கூடி நீதிபதி லோதா கமிட்டியின் அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து விவாதிக்கவுள்ளது.
எனவே பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறைகளை விவாதிக்கும் முக்கியக் கூட்டமாகும் இது கருதப்படுகிறது.
தடை தீர்ப்புக்குப் பிறகும் கூட ராஜிவ் சுக்லா, ஐபிஎல் கிரிக்கெட் 8 அணிகளுடன் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது..
நாங்கள் எப்போதும் ஐபிஎல் பற்றிய அக்கறையுடன் இருக்கிறோம், அடுத்த ஐபிஎல் போட்டித் தொடர் பெரிய வெற்றியடையும் என்று நான் உறுதியுடன் கூறுகிறேன். எனவே தீர்ப்பு, ஐபிஎல் என்ற மிகப்பெரிய வர்த்த அம்சத்தை பெரிய அளவு பாதிக்கக் கூடாது என்றே நாங்கள் நினைக்கிறோம். எனவே 8 அணிகள் இடம்பெறுவது அவசியம், 6 அணிகளுடன் தொடரை நடத்த இயலாது.
தடை விவகாரத்தை யோசிகும் போது தேர்வுகள் கைவசம் உள்ளன, அத்தனை வாய்ப்புகளையும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) விவாதிப்போம். இதில் ஒரு தேர்வு என்னவெனில் தடை செய்யப்பட்ட இரண்டு அணிகளையும் பி.சி.சி.ஐ. -யே எடுத்து நடத்துவது. அதற்கு பொறுப்பானவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது" என்றார்.
ஐபிஎல் லீகில், கிரிக்கெட் ஆட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் அணி, அல்லது அணியை நிர்வகிக்கும் குழுமம், அல்லது உரிமையாளர் ஆகியோரது ஒப்பந்தங்களை ரத்து செய்யும் உரிமை பி.சி.சி.ஐ.-க்கு உள்ளது.
இதன்படி பார்த்தால், சென்னை, ராஜஸ்தான் அணிகளை பிசிசிஐ நீக்கி விட்டு டெண்டர் மூலம் புதிய 2 அணிகளை கொண்டு வர முடியும்.
ஐபிஎல் சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதும் மற்றொரு தேர்வாகும்.
அதாவது, புதிய 2 அணிகளுக்கு டெண்டர் விடுத்து, அதில் தடைசெய்யப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் வீரர்களை ஆட வைக்கலாம், அதாவது தடை செய்யப்பட்ட அணிகளின் வீரர்களை இந்த புதிய அணிகளுக்குக் கடனாக கொடுக்கலாம்.
2 ஆண்டுகள் தடை முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் பழைய உரிமைதாரர்களின் அணிக்கு செல்லலாம். இதுதான் முத்கல் கூறிய மற்றொரு பரிந்துரை. இது கால்பந்து லீக் பாணியாகும்.
இப்படிச் செய்தால் 2 ஆண்டுகள் கழித்து புதிய அணிகள் என்னவாகும்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு இன்றைய ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.