அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் ஒதுக்கீடு.. ராமர் கோயிலில் இருந்து மசூதி எவ்வளவு தூரம் தெரியுமா?
லக்னோ: அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை புதிதாக கட்டிக்கொள்ள உத்தரப்பிரதேச அரசு இடம் வழங்கி உள்ளது. அந்த இடம் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் இருந்து அதாவது நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு சொந்தமா, முஸ்லிம்களுக்கு சொந்தமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த இடம் ராமர் கோயில் கட்ட அனுமதித்து உத்தரவிட்டது.

அதேநேரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்த உச்ச நீதிமன்றம் அயோத்தி நகரிலேயே புதிய மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை ஏற்று உத்தரப்பிரதேச அரசு 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தள்ளி வழங்கி உள்ளது. முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் குறித்து உத்தரப்பிரதேச அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா பேசுகையில், "மொத்தம் 3 இடங்களை தேர்வு செய்தோம். அதில் ஒரு இடம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த இடத்திற்கு நல்ல போக்குவரத்து வசதி உள்ளது. வகுப்பு வாத பிரச்சனைகள் வராது சட்ட ஒழுங்கும் அங்கும் சிறப்பாக உள்ளது. அயோத்தியின் மாவட்ட தலைநகரில் இருநது 18 கி.மீ தூரத்தில் லக்னோ நெடுஞ்சாலையில் தனிபூர் கிராமத்தில் இந்த நிலம் உள்ளது" என்றார்.
இதனிடையே உத்தரப்பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் "14 கோசி பரிக்ரமா" இடம் அயோத்தி நகருக்கு வெளியே அமைந்துள்ளது. அயோத்தில் திருவிழாக்களின் போது 42 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் கூடுவார்கள் என்றும் எனவே பரிக்ரமா எல்லைகளுக்கு அப்பால் மசூதிக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்று சாமியார்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications