மோடிக்கு பக்கபலமாகத் திகழும் அந்த 7 பேர்!
டெல்லி: ஒரு சாதாரண டீக்கடைப் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிற்கும் நரேந்திர மோடியின் இன்றைய இமேஜ், செல்வாக்குக்கு 7 பேர் முக்கிய காரணங்களாக உள்ளனர்.
இவர்களின் பக்க பலம்தான் மோடியை எப்பேற்ப்பட்ட நெருக்கடிகளையும் சகஜமாக எதிர்க்கொள்ள வைக்கிறது.
அந்த ஏழுபேர் குறித்த ஒரு பார்வை...

அருண் ஜேட்லி
இந்த ஏழு பேரில் முதல் இடத்தில் இருப்பவர் அருண் ஜேட்லி. பாராளுமன்ற மேல்சபை பா.ஜ.க. தலைவராக இருக்கும் இவர் மோடியின் நீண்ட நாள் நண்பர்.
பா.ஜ.க. மேலிடத்தில் மோடிக்கு ஏற்பட்ட முட்டுக் கட்டைகளை தகர்த்து பிரதமர் வேட்பாளராக்கியவர்களில் முக்கியமானவர். மத ரீதியாக மோடிக்கு நேர்ந்த களங்கத்தைத் துடைத்ததிலும் கணிசமாக பங்கு இவருக்கு உண்டு. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் வலது கையாக இவர் திகழ்வார் என்கிறார்கள்.

அமித் ஷா
இவரை மோடியின் இரு கரங்களில் ஒன்றாகவே வர்ணிக்கிறார்கள். தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுவதில் இவர் கில்லாடி. எனவேதான் இவரை உத்தரபிரதேச மாநில பிரசார பொறுப்பாளராக மோடி நியமனம் செய்துள்ளார்.

ஆனந்தி பென் படேல்
மோடியின் 7 பேர் அணியில் மூன்றாவது இடத்தில் ஆனந்தி பென் படேல் உள்ளார். மன்மோகன் சிங்குக்கு சோனியா எப்படி உள்ளாரோ, அப்படி மோடிக்கு இவர் என வர்ணிக்கப்படுபவர். மோடி பிரதமராகும் பட்சத்தில் இவர்தான் குஜராத் முதல்வராக இருப்பார் என்கிறார்கள்.

பரிந்த் பகத்
7 பேர் அணியின் நான்காவது நபர் பரிந்த் பகத். மோடியின் இளம் வயது தோழர். ஆர்எஸ்எஸ்ஸில் மோடி சேர்ந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர். மோடியின் ஊடக தொடர்புகள், கட்சியின் மாநில அளவிலான வரவு- செலவை கவனித்து கொள்வது இவர்தான். மோடியின் நம்பிக்கைக் குரியவர்களில் பரிந்த் பகத் முதலிடத்தில் உள்ளார்.

மவுலிக் பகத்
பரிந்த் பகத்தின் மகன்தான் இந்த மவுலிக் பகத். மோடியின் இ - கவர்னன்ஸ் மற்றும் ஆன்லைன் திட்டங்களில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

கைலாஷ்நாதன்
குஜராத்தில் 33 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கைலாஷ்நாதன் என்பவர் நிர்வாக ரீதியாக மோடிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளார். மோடியின் பல முக்கிய சாதனை திட்டங்களுக்கு வடிவமைத்து கொடுத்தது இவர்தான்.

ஹிரன் ஜோஷி
நரேந்திர மோடியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஹிரன் ஜோஷி தகவல் தொடர்பில் நிபுணர். குஜராத் மாநில அரசின் 300 இணையத்தள சேவைகளை ஒருங்கிணைத்து இவர் மோடிக்கு பக்க பலமாக உள்ளார்.
குஜராத்தில் உள்ள சுமார் 18 ஆயிரம் கிராமங்களுடன் மோடி தினமும் நேரடி தொடர்பு கொள்ள ஹிரன் ஜோஷி தலைமையிலான ஐடி படைதான் இரவு-பகலாக பணியாற்றுகிறது. இந்த 7 பேர் அணியால் தான் நரேந்திர மோடியால் நினைத்ததை அமல்படுத்த முடிகிறது.












Click it and Unblock the Notifications