தீவிரவாதிகள் அழிப்பு... குழந்தைக்கு 'மிராஜ்' என பெயர் சூட்டி மகிழ்ச்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெருமை மிக்க போர் விமானமான 'மிராஜ் 2000' நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான பாலக்கோட்டில் முகாமிட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினரை அழித்து நாடு திரும்பியது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள தபார் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் மஹாவீர் என்பவரின் குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிடப்பட்டுள்ளது.
மிராஜ் போர் விமானங்கள் தீவிரவாத முகாம்களை அழிக்கும் நேரத்தில், பிறந்த இந்த குழந்தை குறித்து அவரது தாய் மாமாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராணுவத்தில் உள்ள அவர் அந்த குழந்தைக்கு மிராஜ் என பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
குழந்தையின் இரண்டு மாமாக்களும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். பாலக்கோடு தீவிரவாத முகாம்களை மிராஜ் 2000 போர் விமானங்கள் தாக்கிய 3.30 மணி அளவில், மஹாவீரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 3.50 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில், பிறந்த குழந்தைக்கு மிராஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆசிரியரின் குழந்தைக்கு நாட்டின் பெருமை மிக்க மிராஜ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.