லோக்சபா தேர்தல்.. பிரதான யுத்த களமாகும் வாரணாசி..
வாரணாசி: ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி அல்லது காசி இப்போது லோக்சபா தேர்தலில் பிரதான யுத்த களமாக உருவெடுத்திருக்கிறது.. ஆம் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இங்கு களம் காண்பது உறுதியாகிவிட்ட நிலையில் நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் வாரணாசி மீது திரும்பியுள்ளது.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் 80 தொகுதிகளைக் கொண்டது உத்தரப்பிரதேச மாநிலம். இம்மாநிலத்தில் அதிக இடங்களைப் பெறக் கூடிய ஆட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக உருவெடுக்கும். இதுதான் கடந்த கால தேர்தல்கள் சொல்லும் வரலாறு..
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக.. நாட்டின் பிரதமர்களை கொடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸின் கனவுகள் தகர்ந்து போய் மாநில கட்சிகளும் பாஜகவும் மாநிலத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்க.. காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போன கதையாகத்தான் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது..

உ.பி.யில் 40 தொகுதிகள் இலக்கு..
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளில் 40 ஐ கைப்பற்றிவிடுவது என்பதுதான் திட்டம். இதற்காகவே அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா அம்மாநிலத்தில் களமிறக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக பம்பரமாக சுற்றி வருகிறார்.

மோடி அலை..
நாடு முழுவதும் வீசுவதாக நம்பப்படுகிற மோடி அலையில் எப்படியும் 40 தொகுதிகளை உத்தரப்பிரதேசத்தில் அறுவடை செய்துவிட முடியும் என்பதுதான் பாஜகவின் கணக்கு..

வாரணாசி..
ஹிந்துக்களின் புனித நகரான காசி அல்லது வாரணாசி தொகுதியில் கணிசமான இஸ்லாமியர்கள் இருந்தாலும் அது பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருப்பவர் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி..

மோடி குறி..
இந்த தொகுதியை இப்போது மோடி குறி வைத்து இருக்கிறார். வாரணாசி உட்பட உத்தரப்பிரதேச தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் ஹிந்தி பெல்ட் எனப்படும் இதர மாநிலங்களிலும் பாஜக அலை கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறது பாஜக. இதனாலேயே ஹிந்தி பெல்ட் எனப்படும் மாநிலங்களில் மையமான உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மோடியை களமிறக்குகிறது பாஜக.

கேஜ்ரிவால்..
வாரணாசியில் மோடி போட்டியிடுவார் என்றவுடன் நானும் அங்கு போட்டியிடுவேன் என்கிறார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.

டெல்லி அல்ல காசி..
ஆனால் டெல்லியைப் போல மேல்தட்டு வர்த்தக்கத்தினர் நிறைந்த நகரம் அல்ல வாரணாசி.. வாரணாசி என்பது ஹிந்துக்களின் புனித நகரமாக உயர் சாதியினர் பெரும்பான்மையினராக வாழக் கூடிய தொகுதி. ஹிந்துத்துவ சிந்தனை வேரூன்றி கிடக்கக் கூடிய ஒரு பூமி.. இங்கு ஹிந்துத்துவாதிகளின் கைதான் ஓங்கியிருக்கும் என்பதால் கேஜ்ரிவால் வகையறாக்களுக்கு எத்தனை ஆயிரம் ஓட்டு விழும் என்பதுதான் கேள்வி.. தற்போது வாரணாசியில் மோடி பெறப் போகும் வெற்றி ஹிந்தி பெல்ட் மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதால் பிரதான யுத்த களமாகி இருக்கிறது அந்த தொகுதி.












Click it and Unblock the Notifications