ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுகிறது.. பகீர் புகார்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் , பா.ஜ.க.வுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும், மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

அசாம், வங்கத்தில் முதற்கட்ட தேர்தல்
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்
இதேபோல் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜர்கிராம், மேற்கு திட்னாபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் காலையிலேயே வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அசாமிலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம்
கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வாக்களார்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாஸ்க், கையுறை அணிந்தே வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த இரு மாநிலங்களில் சில பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஈ.வி.எம். மெஷின் மீது திரிணாமுல் குற்றச்சாட்டு
இதனால் மாநில போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் பட்டனை அழுத்தினாலே, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. புருலியா மாவட்டம் காஷிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்(பூத் எண் 6) ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று வாக்களித்த மக்கள் கூறியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

வாக்குச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்றினார்கள்
காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.












Click it and Unblock the Notifications