எனக்கு அளிக்கப்பட்ட மரியாதை 125 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம்... துபாயில் மோடி உரை
துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் தனக்கு அளிக்கப்பட்ட மரியாதை 125 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை 125 கோடி மக்களால் மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் தனது 2 நாள் சுற்றுப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்துடன் பேச்சை துவங்கினார். தொடர்ந்து மோடி பேசியதாவது...
துபாயில் மினி இந்தியாவை பார்க்கிறேன். இங்கு வசிக்கும் நீங்கள் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள். அணுஆயுத சோதனைக்கு பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும், இந்தியாவுக்கு அரபு நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. எனது தேர்தல் வெற்றி துபாயில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் பயணம் செய்கின்றன. ஆனால், இந்திராவுக்கு பிறகு இந்தியப்பிரதமர் ஒருவர் யு.ஏ.இ., வருவதற்கு 34 வருடங்கள் ஆகியுள்ளது.
அபுதாபி, துபாய் பயணம் நல்லது செய்ய வேண்டும் என தூண்டியது. இங்கு வந்த என்னை பட்டத்து இளவரசர் அளித்த வரவேற்பு மற்றும் அன்பை மறக்க மாட்டேன். இது 125 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை. பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு சூழ்ந்துள்ள நிலையில், அபுதாபியில் கோவில் கட்ட யு. ஏ,.இ., இடம் ஒதுக்கியுள்ளது. இதற்காக நாம் பட்டத்து இளவரசரை பாராட்ட வேண்டும்.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்களின் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளிக்கிறேன். இந்தியாவும், யு.ஏ.இ.,யும் சேர்ந்து இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்ற முடியும். அனைவரும், இந்தியா வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு என கூறுகின்றனர். முதலீட்டிற்கு சாதகமான அம்சங்கள் இந்தியாவில் உள்ளது.
உலக நாடுகள் பயங்கரவாதம் பற்றி முன்னர் அறிந்து வைத்திருக்கவில்லை. பயங்கரவாதம் காரணமாக இந்தியா அதிக பாதிப்பு ஆளாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என உலக நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். பயங்கரவாதத்தில், நல்ல பயங்கரவாதம் கெட்ட பயங்கரவாதம் என வேறுபாடு இல்லை. நல்ல தலிபான்கள், கெட்ட தலிபான்கள் என யாரும் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகளுடன் இணைந்துபோரிட தயார்.
பேச்சுவார்த்தை மூலம் தான் அனைத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாதிப்பு ஏற்பட்டது. நாகாலாந்து பயங்கரவாத குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பயங்கரவாதம் யாருக்கும் பலன் தராது. அது அழிவுப்பாதையை தான் காட்டும்.
இவ்வாறு துபாய் வாழ் இந்தியர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தனது உரையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி துபாய் விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார்.