இந்தத் தந்தைக்கு வந்த அவலம் யாருக்குமே வரக் கூடாது....!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்தத் தந்தைக்கு வந்த அவலம் போல வேறு யாருக்குமே வரக் கூடாது. பரிதாபத்துக்குரிய இந்தத் தந்தையின் கதை படிப்போருக்கு கண்களில் ரத்தக் கண்ணீரை வர வைக்கும்.
நிர்பயாவின் துயரத்திற்காக இந்தியாவே அழுதது, கொதித்தது, கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தன. சட்டங்களை மாற்றச் சொல்லி மக்கள் குரல் கொடுத்தனர். சட்டத்திலும் கூட திருத்தம் வந்தது.
ஆனால் இன்னும் நமது நாட்டு ஆண்கள் முழுமையாக திருந்தவில்லை. ஆங்காங்கு பாலியல் பலாத்காரங்கள் நடந்தபடிதான் உள்ளன. பலாத்காரம் தொடர்பான கொடூரக் கொலைகளும் அரங்கேறியபடிதான் உள்ளன. இந்த நிலையில் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஒரு தந்தையின் சோகம் மனதைப் பிசைகிறது, படிக்கும்போதே.
கூலித் தொழிலாளி
இந்தத் தந்தை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது 9 வயது மகள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
மிருகத்திடம் சிக்கி
அந்த டிரைவர் மிருகம் சிறுமி என்றும் பாராமல் மிகக் கொடூரமாக நடந்ததன் விளைவாக, சிறுமியின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன. குடலும் சிதைந்தது.
ஜாம்ஷெட்பூரில் சிகிச்சை
உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை இன்று வரை தொடர்கிறது. சிறுமிக்கு கலெக்டமி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடலின் ஒரு பகுதி சிதைந்து போனதால் அதை அகற்றி விட்டனர்.
4 கிலோமீட்டர் நடந்து சென்று
இன்று வரை சிகிச்சை தொடர்வதால், தனது மகளை தூக்கிக் கொண்டு தினசரி தனது கிராமத்திலி்ருந்து 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவமனைக்குப் போய் வருகிறார் இந்தத் தந்தை. ஒரு சைக்கிள் வாங்கக் கூட வசதியில்லாதவர் இந்தத் தந்தை. இதனால் நடந்தே தனது மகளை இடுப்பில் வைத்துத் தூக்கிக் கொண்டு செல்கிறார்.
என் மகள் எனக்கு முக்கியம்
இதனால் வேலைக்குக் கூட அவர் போக முடிவதில்லை. அதைப் பற்றி அவரும் கவலைப்படவில்லை. எனது மகள்தான் எனக்கு முக்கியம். அவளை சரிப்படுத்துவதே முக்கியமானது என்று கூறுகிறார் அந்தத் தந்தை.