ஒரு பார்சல் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கேபிஎன் பஸ்களை எரிக்க உதவிய பாக்யஸ்ரீ!
பெங்களூரு: பிரியாணி வாங்கித் தர்றோம், பணம் தருகிறோம், கேபிஎன் பஸ்கள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்டார்கள். இதனால்தான் நான் அடையாளம் காட்டினேன் என்று கேபிஎன் பஸ்கள் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பாக்யஸ்ரீ போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொன்னதோடு நில்லாமல், தானே அந்தக் கும்பலோடு சேர்ந்து பஸ்களுக்கும் அவர் தீவைத்துள்ளார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட சிடிடிவி காட்சிகளை அவரிடம் காட்டி வன்முறைக் கும்பலில் இருந்தவர்களை போலீஸார் கண்டுபிடித்து வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக பாக்யஸ்ரீ உள்பட 7 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர்.
கைதான 7 பேர் மீதும் பல்வேறு கடுமையான பிரிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாக்யஸ்ரீயிடமும் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கன்னட கஸ்தூரி சங்காத்தனே என்ற கன்னட அமைப்பிலும் சமீபத்தில் சேர்ந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

22 வயது பாக்யஸ்ரீ
பெங்களூர் நைஸ் ரோடு அருகே உள்ளட டிசோசா நகரைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. யாத்கிரை சொந்த ஊராகக் கொண்ட இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். கேபிஎன் பஸ்கள் நிறுத்பட்டிருந்த கேபிஎன் பஸ் டிப்போ இவரது வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. அந்த பஸ்களை வன்முறைக் கும்பல் எரித்து சாம்பலாக்க முக்கிய காரணமே இந்த பாக்ஸ்ரீதான்.

ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ்
ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இவர்கள் பாக்யஸ்ரீயிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. சாதாரண அல்ப காரணத்திற்காக இந்த பஸ்களை எரிக்க உதவியுள்ளார் பாக்யஸ்ரீ என்பதுதான் அதிர்ச்சிகரமாக உள்ளது.

அப்பா கிடையாது
பாக்யஸ்ரீக்கு அப்பா கிடையாது. தாயுடன் வசித்து வந்தார். கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலருடன் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர்கள்தான் சம்பவத்தன்று பாக்யஸ்ரீயிடம் வந்து கேபிஎன் பஸ்கள் நிறுத்தி வைக்கும் இடத்தை அடையாளம் காட்டக் கூறியுள்ளனர்.
பிரியாணி ஆசை காட்டி
பாக்யஸ்ரீயிடம் அவர்கள் பிரியாணி தருவார்கள், பணமும் தருவார்கள் என்று ஆசை காட்டியுள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட அவர் உடனே அவர்கலை கையோடு அந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று அடையாளம் காட்டியுள்ளார். அதன் பிறகு வன்முறை வெறியாட்டம் தொடங்கியது.

பெட்ரோல் எடுத்துக் கொடுத்தார்
வன்முறை கும்பலிடம் இவரே பெட்ரோல் கேனை எடுத்துக் கொடுத்துள்ளார். இவரும் சேர்ந்து பஸ்ஸுக்குத் தீவைத்துள்ளார். அந்தக் கும்பலோடு சேர்ந்து இவரும் பஸ்களைக் கொளுத்தியுள்ளார்.

சந்தோஷம் பாராட்டு
மொத்த பஸ்களையும் கொளுத்திய கும்பல் வெறித்தனமாக அதைக் கொண்டாடியுள்ளது. இதற்குக் காரணம் நீதான் என்று கூறி பாக்யஸ்ரீயையுயம் அவர்கள் கொண்டாடியுள்ளனர், பாராட்டியுள்ளனர் மகிழ்ந்துள்ளனர். தான் ஒரு பஸ்ஸை தீவைத்துக் கொளுத்தியதாக போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் பாக்யஸ்ரீ.

போலீஸ் அதிர்ச்சி
பெண் ஒருவரே, அதுவும் இவ்வளவு இளம் வயது கொண்ட பெண் ரவுடி போல நடந்து கொண்டு பஸ்ஸை எரித்த வெறிச் செயல் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம். பெங்களூரு கலவரம் தொடர்பாக மொத்தம் 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதுவும் அதிர வைப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications