இந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்
அகர்தலா: நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் விமர்சித்துள்ளார்.
அண்மையில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என்றும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும கர்நாடகாவில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தெரிவித்து உள்ளார். பிர்லப் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்குவதற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் நம் நாட்டை நேசிக்காதவர்கள். நம்முடைய நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியை பேசுவதால், இந்தி தேசிய மொழியாவதற்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன்.
வெள்ளைக்காரர்கள் 200 வருடங்கள் கூட முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. ஆங்கில மொழியால் அலுவலக பயன்பாட்டிற்கு எவ்வித பயனும் இருப்பதில்லை. இப்படி சொல்வதால் நான் ஆங்கில மொழிக்கு எதிரானவனோ அல்லது இந்தி மொழியை திணிப்பவனோ கிடையாது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications