கூட்டம் கூட்டமாக சூரத்-ஐ விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்.. ரயில் நிலையம் முழுக்க மக்கள் கூட்டம்!
சூரத்: குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள உத்னா ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதலே ரயில்வே நிலையத்தின் பிளாட்பார்ம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏற மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்த கூட்டத்தை சமாளிக்க போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையும் உருவானது. ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்களில் சுமார் 21,000 பேர் பயணம் செய்துள்ளனர். திடீரென கூட்டம் கூட்டமாக மக்கள் செய்யும் வேலையை விடுத்து சொந்த ஊருக்கு செல்ல என்ன காரணம்?

கோடை விடுமுறை
பொதுவாக கோடை விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்கும், சுற்றுலாவுக்கும் மக்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த திடீர் கூட்டம் வெறும் கோடை விடுமுறை காரணமாக அல்ல. கடந்த சில வாரங்களாக சூரத்தில் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், வேலை வாய்ப்பும் குறைந்துள்ளதாக ரயிலுக்கு காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு, அவர்களின் தினசரி வாழ்வை பெரிய அளவில் பாதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எல்பிஜி சப்ளை தட்டுப்பாடு, பெட்ரோல் கெமிக்கல் பொருட்கள் தட்டுபாடு காரணமாக சூரத்தில் பல தொழிற்சாலைகள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஒருபக்கம் வேலைவாய்ப்பும் இல்லை, மறுபறம் சிலிண்டர் சப்ளை இல்லாத காரணத்தால் அதிக தொகை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் கடினமாகியுள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த ரோஹித் பாஸ்வான் என புலம்பெயர் தொழிலாளி கூறுகையில், எல்பிஜி கிடைக்காத நிலை மற்றும் தொழிற்சாலையில் வேலை குறைவு காரணமாக தாயகத்திற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறுகிறார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் மௌர்யாவும் இதே நிலையை சுட்டிக்காட்டியுள்ளார். சிலர், எரிவாயு கிடைக்காததால் உணவு சாப்பிட முடியாத நிலை உருவாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.
சூரத்தில் காணப்படும் இந்த நிலை, உள்ளூர் பிரச்சனை மட்டும் அல்ல. மத்திய கிழக்கில் உருவான பதற்றம், எரிசக்தி விநியோக சங்கிலியை பாதித்துள்ளது. இதன் தாக்கமாக எல்பிஜி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பல்வேறு தொழில்துறை பகுதிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் தொழிலாளர் அதிருப்தி
இந்த பிரச்சனை சூரத்தில் மட்டுமே இல்லை. நொய்டா, பானிபட், குருகான், சோனிபட் போன்ற இதர வட இந்திய தொழில்துறை பகுதிகளிலும் குறைவான வருமானம், வேலைவாய்ப்பு உத்தரவாதம், வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளது போன்ற காரணத்தால் தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. சில இடங்களில் போலீஸ் மற்றும் தொழிலாளர்கள் இடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களுக்குப் பிறகு, சம்பள உயர்வு மற்றும் வேலைநிலைகள் மேம்படும் என எதிர்பார்த்த தொழிலாளர்கள், அது நடக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் கிடைப்பில் ஏற்பட்ட தடைகள், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. குறிப்பாக குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் சிலிண்டர் பெறுவதில் அதிகப்படியான சிக்கல்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பலர் சொந்த ஊருக்கு குடும்பம் குடும்பாக செல்லும் முடிவை எடுத்துள்ளனர்.
இந்தியாவின் தொழில்துறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். மத்திய அரசு சிறிய சிலிண்டர்கள் மற்றும் குழாய் வழியாக எரிவாயு வசதிகளை அதிகரித்தாலும் இது உடனடி தீர்வு அளிக்காது என்பதே நிதர்சனமான உண்மை.














Click it and Unblock the Notifications