வெத்து மிரட்டல்களுக்கெல்லாம் நீதிபதிகள் அஞ்சமாட்டார்கள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
டெல்லி : வெத்து மிரட்டல்களுக்கெல்லாம் நீதிபதிகள் அஞ்சமாட்டார்கள் என்றும், அவர்களுடைய பணி தடையின்றி தொடரும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் வெடி குண்டு தாக்குதல் குற்றவாளி யாகூப் மேமனின் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்கு சி மணி நேரங்களுக்கு முன் அவனது சார்பில் இறுதி கட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.சி.பாந்த், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லத்தின் பின்புறம் அந்த கடிதத்தை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மிரட்டல்கள் எல்லாம் நீதிபதிகளை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், எந்த அச்சமுமின்றி நீதிபதிகள் தங்கள் பணிகளை தொடர்வார்கள் என்றும் கூறினார்.
எனினும் இது போன்ற மிரட்டல்களை எளிதில் எடுத்துக்கொள்ளாமல் நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.