உச்சநீதிமன்றமே அதிர்ந்த கைதட்டல்கள்...நிர்பயா வழக்கு தீர்ப்பின் நெகிழ்ச்சி தருணங்கள்
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை நீதிபதிகள் உறுதிசெய்ததை அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
டெல்லி : டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரம் செய்த வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வெளியிட்ட போது அங்கு எழுந்த கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தன.
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்று நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தான் தீர்ப்பின் இரண்டு முக்கிய அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லப்போவதாக தெரிவித்தார்.

அரிதான வழக்கு
இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக உச்சநீதிமன்றம் கருதுவதாக அப்போது அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றவாளிகளை விடுவிக்க கருணை என்பதற்கு எந்த அடிப்படையுமே இல்லை என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.

குற்றவாளிகளே
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களுக்கும் பேருந்தில் நடந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், வேண்டுமென்றே இவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதனை எதிர்த்து கடுமையாக வாதாடிய டெல்லி காவல்துறை தரப்பு வழக்கறிஞர் இது ஒரு மோசமான குற்றம் என்றும் இதற்கான ஆதாரங்களான பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் அனைத்தும் குற்றம் நடந்ததை நிரூபித்துள்ளதாக தெரிவித்தனர்.

மரண தண்டனை உறுதி
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குற்றவாளிகள் 4 பேருக்கும் இதில் தொடர்பிருப்பது தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்வதாக அறிவித்தது.

இந்தியாவின் மகளுக்கு கிடைத்த வெற்றி
இதனையடுத்து கோர்ட் வளாகத்தில் உணர்ச்சிப்பெருக்கோடு காத்திருந்த அனைவரும் கைகளை தட்டி தீர்ப்பை வரவேற்றனர். இந்த தீர்ப்பு இந்திய நாட்டின் மகள் சின்னாபின்னப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் உயிர் பிழைக்க போராடி இறுதியில் தோற்ற நிர்பயாவிற்கு கிடைத்த வெற்றி என்றே அனைவரும் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications