டெல்லியில் டைகர் உட்ஸ்.. காட்சிப் போட்டிக்காக!
டெல்லி: பிரபல அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் காட்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார்.
உட்ஸ், இந்தியாவருவது இதுவே முதல் முறையாகும். உலகின் நம்பர் ஒன் வீரரான உட்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார். துபாயில் நடந்த டெசர்ட் கிளாசிக் போட்டியில் அவர் பங்கேற்று விட்டு டெல்லி வந்துள்ளார்.
உட்ஸ் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்பு கருதி அவர் யார் கண்ணிலும் காட்டாமல் படு வேகமாக கூட்டிச் செல்லப்பட்டு விட்டார்.
சச்சினுடன் ஆடுகிறார்
பல்வேறு சிறப்பு விருந்தினர்களுடன் டெல்லியில் கோல்ப் ஆடவுள்ளார் உட்ஸ். அதில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர்.
டெல்லி கோல்ப் கிளப்பில்
18 ஹோல் ரவுண்ட் போட்டியில் அவரும், சச்சின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இது டெல்லி கோல்ப் கிளப்பில் நடைபெறுகிறது.
ஹீரோ மோட்டார்ஸுக்காக
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தான் இந்தக் காட்சிப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. ஹீரோ மாோட்டார்ஸ் நிறுவன தலைவர் பவன் முஞ்சால், இந்திய கோல்ப் வீரர்கள் சிவ் கபூர், அர்ஜூன் அத்வால் கபூர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் இந்தப் போட்டியில்.
சர்ச்சையிலிருந்து சிக்கி மீண்டும் கோல்ப்
பல்வேறு காதல்கள், மனைவியுடன் மோதல், வீட்டுச் சண்டை, விவாகரத்து என பல தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய உட்ஸ் தற்போது மீண்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.