வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பு
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வங்கிக் கணக்குடன் ஆதார் எணா்ணை இணைப்பதற்காக அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நலத்திட்ட தவிகள் மற்றும் மானியங்களைப்பெற கேஸ் இணைப்பு, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறுகிய காலகட்டத்துக்குள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அளிக்கப்பட்ட இறுதி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிலைஃப்.இன் என்ற இணையதளம் சார்பில் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து கடந்த மாதம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இது வரை வங்கிகளுக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.