டெல்லியில் சுட்டெரிக்கும் வெயிலில் அரை மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்!
டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று அரை மொட்டை அடித்து சுட்டெரிக்கும் வெயில் அமர்ந்து வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 20வது நாளாக தொடரும் அவர்களது போராட்டத்தை பாஜக அரசு ச
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று அரை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 20 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மண்டை ஓடு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளை கழுத்தி மாட்டிக் கொண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி ஒரு சுடுகாட்டு சூழலை உருவாக்கி மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தினார்கள்.

தற்கொலை
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கயிற்றில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு, விவசாயிகள் கஷ்டங்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களை வந்து சந்திக்கும் டெல்லி வாழ் தமிழர்களிடமும் இதுகுறித்த விளக்கங்களை அளித்தனர். மேலும் மரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளவும் விவசாயிகள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சங்கு ஊதி..
இதே போன்று விவசாயி ஒருவருக்கு மாலையிட்டு, வாயை கட்டி, நெற்றில் நாணயம் ஒட்டி சவத்தைப் போன்று படுக்க வைத்து போராட்டம் நடத்தினார்கள். அந்த சவத்தைச் சுற்றியும் மண்டை ஓடு எலும்புகளை வைத்தும் சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தை விவசாயிகள் நிகழ்த்தினார்கள்.

எலிக்கறி
விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எந்த வடிவில் சொன்னாலும் புரியாத மத்திய அரசிற்கு விளங்க வேண்டும் என்பதற்காக எலிக் கறி உண்ணும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக் காட்டினார்கள்.

பாம்புக் கறி
இதனைத் தொடர்ந்து, சமைக்காத பச்சை பாம்புக் கறியை வாயில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் நடத்தினார்கள். இந்தப் போராட்டங்களினால் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

அரை மொட்டை
இந்நிலையில், 20வது நாளான இன்று தலை முடியை பாதியாக வழித்து ‘அடை மொட்டை' போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லியின் சுட்டெரிக்கும் வெயிலில் பாதி மொட்டை அடித்துக் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பாதி மீசை
என்ன செய்தும், மத்திய அரசு தங்களை கண்டு கொள்ளாததால் நாளை விவசாயிகள் அரை மீசையை வழித்து போராட்டம் நடத்தப் போவதாக விவசாயி அய்யாகண்ணு அறிவித்துள்ளார். இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் தங்களை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவின் கொடூரம்
தமிழகத்தில் தனது பிள்ளைகள், உறவினர்களை விட்டுவிட்டு டெல்லி சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது கிஞ்சித்தும் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. இதில் தமிழக பாஜக தலைவர்கள் போராட்டக்காரர்களை கிண்டல் செய்யும் அவலம் வேறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications