தமிழக விவசாயிகளின் 9வது நாள் போராட்டம்… வேல்முருகன் நேரில் சென்று ஆதரவு
டெல்லியில் போராட்டம் 9 நாட்களாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தற்காலிகமாக போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
எனினும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நூதன போராட்டம்
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மண்டை ஓடுகளுடனும், தூக்கு கயிறு போட்டுக் கொண்டும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்கு குறித்து உறுதி அளித்தார். இன்றும் வேளாண்துறை அமைச்சர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வேல்முருகன் ஆதரவு
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று டெல்லி சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகளை போன்று உடை அணிந்து விவசாயிகள் அமைத்துள்ள மேடையில் தானும் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார் வேல்முருகன்.
விவசாயிகள் உறுதி
முன்னதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணுவிற்கு பொன்னாடை போர்த்தி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்தார். தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை என்று விவசாயிகள் உறுதியோடு 9வது நாளாக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.