பீகார் ஹோட்டலில் மதுரை வியாபாரி மர்ம மரணம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த அந்த நபரின் பெயர் என்.ஜே.கே. பாபு என்பது தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அந்த வியாபாரி பீகாரின் கிழக்கு சம்பரன் பகுதியில் உள்ள ரக்ச்சூல் விடுதி அறையில் கடந்த 26ம் தேதி காலை 11.30 மணிக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
27ம் தேதி வெளியில் போய்விட்டு வந்த அவர் இரவு 7 மணிக்கு ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார். அறையை உள்பக்கமாக பூட்டிய அவர் 28 தேதி மதியம் வரை எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசிற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அறைக்கதவை உடைத்து திறந்த போலீசார் படுக்கையில் நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்த பாபுவின் உடலைக் கைப்பற்றினர். அவரது படுக்கையில் மது பாட்டில் ஒன்றும் சிகரெட் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எந்தவித காயங்களும் காணப்படவில்லை.
அதேசமயம், அவரது படுக்கையில் சிறிய அளவிலான டப்பாவில் பவுடர் போன்ற பொருள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை பரிசோதனைக்காக தடய அறிவியல்துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பாபு உள்ளூர் வியாபாரிகளுக்கு ஸ்டிக்கர்களை சப்ளை செய்யும் தொழில்செய்து வந்துள்ளார். வியாபார விசயமாக பீகார் வந்த போது மர்ம்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தடயவியல் துறையினர் பரிசோதனை முடிவுக்குப் பின்னரே இந்த மரணத்தில் துப்புத்துலங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.