கர்நாடகாவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக லாரி டிரைவர்.. காப்பாற்ற மனைவி மனு
பெங்களூர்: காவிரி பங்கீடு தொடர்பான கலவரம் உச்சத்தில் இருந்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நைஸ் சாலையில், தமிழக லாரி டிரைவர் ஒருவர் லுங்கியை அவிழ்த்து, ஜட்டியோடு நிற்க வைத்து கன்னட அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
அந்த டிரைவர் பெயர் மணிவேல் (33). திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கல்பாறை கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன். இன்னும் அங்கிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார். அவர் மனைவி என் கணவரை மீட்டு தாருங்கள் என்று முசிறி ஆர்.டி.ஓ. ஜானகியிடம் மனு கொடுத்திருக்கிறார்.

நாமக்கல்லில் உள்ள லாரி தென் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுபவர் மணிவேல். கடந்த 12ம் தேதி மதியம் மங்களூரில் இருந்து, பெங்களூ நகருக்கு காஸ் நிரப்ப வந்தபோது நைஸ் சாலையில் வைத்து 20 பேர் கும்பலால் இந்த மோசமான தாக்குதல் நடைபெற்றது.
பெங்களூருவுக்கு அருகில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பாரத் காஸ் நிறுவன வளாகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அங்கே பாதுகாப்பாக உள்ளாராம் மணிவேல். அங்குள்ள கேன்டீனில்தான் தினமும் சாப்பிடுகிறார். அங்கிருந்து, வெளியே போக அஞ்சியுள்ளார். எனவே தமிழக அரசு அவரை சொந்த ஊர் அழைத்துவர உதவ வேண்டும் என்பது அவரின் குடும்பத்தார் கோரிக்கை.
பேஸ்புக் மூலம் தமிழகத்தை சேர்ந்த சில மனிதாபிமானிகள் பணம் திரட்டி ரூ.2500-ஐ அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அதை எடுக்க கூட முடியாமல் இருக்கிறாராம் மணிவேல். இயல்பு நிலை திரும்பிவிட்டதாக கர்நாடக அரசு கூறிவரும் நிலையில், தமிழக லாரி டிரைவர் நிலைமை அந்த தகவலை பொய்ப்பிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications