சபாஷ்... கலாம் மறைவையொட்டி... கேரளாவில் ஓவர் டைம் வேலை பார்த்த அரசு ஊழியர்கள்
திருவனந்தபுரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருப்பத்திற்கிணங்க, கேரளாவில் கூடுதல் நேரம் பணி புரிந்து அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் மக்கள் ஜனாதிபதியாக இடம் பெற்றவர் அப்துல் கலாம். நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் கலாம் காலமானார். இதனால் இந்தியா முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
கலாம் மரணத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆனால், கேரளாவில் முதலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அம்மாநில அரசு, பின்னர் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அப்துல் கலாம் கேரளாவுக்கு வந்தபோது ஒருமுறை தான் திடீரென இறந்து போனால் எனது சாவுக்காக விடுமுறை அளிக்கக்கூடாது. அன்றைய தினம் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார். அவரது கருத்தை ஏற்று கேரள அரசு அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை' என இவ்வாறு விளக்கம் அளிக்கப் பட்டிருந்தது.
கேரள அரசு அறிவித்த படி, நேற்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா வடக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியர்கள் இரவு 7 மணி வரை பணியாற்றினர். கல்லேற்றும்கரை ரெயில் நிலைய ஊழியர்கள் கூடுதலாக ஒரு ஷிப்ட் வேலை பார்த்தனர்.
இதேபோல், வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பாலக்காடு நகரசபை அலுவலகம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களை போலவே கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்களும் நேற்று கூடுதல் நேரம் பணியாற்றினர். வருகிற ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க போவதாக அறிவித்துள்ளனர்.