பீகாரில் நிதிஷ்- லாலு ஒரே மேடையில் பிரசாரம்! பாஜக மீது கடும் தாக்கு!!
பாட்னா: பீகார் அரசியலில் 20 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் இன்று பிரசாரம் மேற்கொண்டனர். சுதந்திரத்துக்காகப் போராடாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டை ஆள்வதா என்று நிதிஷ்குமார் இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
பீகாரில் சமூக நீதிக்காக போராடிய பெருந்தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிகாட்டுதலில் அரசியல் பயணத்தை தொடங்கியவர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார். 1994 ஆம் அண்டு இருவரும் பிரிந்தனர்.
கடந்த 20 ஆண்டுகாலமாக ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சிகளுக்கு தலைவர்களாக இருக்கும் இருவரும்தான் பீகார் அரசியலை தீர்மானித்து வந்தனர். நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை வைத்துக் கொண்டார்.

பாஜக உறவு முறிவு
கடந்த ஆண்டு பாஜகவில் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டதால் அக்கட்சியுடனான உறவை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். ஆனால் அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் இருவரது கட்சியுமே படுதோல்வி அடைந்தது.

இடைத்தேர்தல்
இதனால் இந்த இருவரும் மீண்டும் கை கோர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் அம்மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ்..
இந்த இடைத்தேர்தலை இணைந்து எதிர்கொள்ள நிதிஷ், லாலு இருவரும் தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த அணியில் காங்கிரஸும் இணைந்தது.

ஒரே மேடையில்
இன்று ஹாஜிபூர் தொகுதியில் லாலுவும் நிதிஷூம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் ஏறினர். இதேபோல் 5 இடங்களில் லாலுவும் நிதிஷூம் ஒன்றாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

நிதிஷை கட்டிப்பிடித்து..
ஹாஜிபூரில் இன்று மேடையேறிய லாலு பிரசாத் தனக்கே உரித்தான ஸ்டைலில் நிதிஷை கட்டிபிடித்து போஸ் கொடுத்தார்.

நிதிஷ் பேச்சு
பின்னர் பிரசார கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:
எங்களுடைய முன்னோர்கள் இந்த நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்.. நமக்கு காந்தி, நேரு, லோகியா, பட்டேல், அம்பேத்கரை தெரியும். ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்காக சிறைவாசம் அனுபவிக்காதவர்கள் இப்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
அவர்களால் அரசாங்கத்தை நடத்தி விட முடியும். ஆனால் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்றுவிட முடியாது.. அந்த நல்ல நாளும் வர இருக்கிறது..இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications