மகாராஷ்டிராவில் சுங்கச் சாவடியை தாக்கி தீ வைத்த விஷமிகள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடியில் உள்ள நான்கு மையங்கள் விஷமிகளால் தாக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் உள்ள ஒன்பது சாலைகளுக்கு சுங்க வரி வசூலிக்கும் சாவடி ஒன்று உள்ளது. சாலைகளே சரியாக இல்லாமல் உள்ள நிலையில் சுங்க வரி மட்டும் வசூலிக்கப்படுவதா என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுங்க வரி பிரச்சனை குறித்து சிலர் சுங்கச்சாவடியில் உள்ள 4 மையங்களை தாக்கி சேதப்படுத்தினர்.
மேலும் சுங்கச் சாவடியின் உடைமைகளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது சிவ சேனா கட்சியினர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் சுங்கச் சாவடியில் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிவ சேனா கட்சி நாளை கோலாபூரில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறுகையில்,
கோலாபூரில் நிலைமையை கண்காணித்து வருகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படக் கூடாது. சுங்க வரி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். மக்கள் அமைதி காத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications