20 நாளில் ரூ 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை! கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட விவசாயி
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20 நாட்களில் 30 லட்சத்திற்கு தக்காளிகளை விற்பனை செய்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவில் தக்காளியின் விளைச்சல் குறைந்துள்ளதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வால் ஹோட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி கிடைப்பதில்லை.அது போல் வீட்டிலும் தக்காளியை பார்த்து பார்த்து செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கத்தை போல் பொத்தி பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. அண்மையில் கூட தென் மாநிலத்தில் ஒரு பெண் விவசாயியின் பண்ணையில் இருந்து 50 முதல் 60 மூட்டைகள் கொண்ட தக்காளி திருடு போனதாக அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வடமாநிலத்தில் தக்காளி வியாபாரி ஒருவர் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார். அவ்வப்போது தக்காளி திருடு போவதால் அதை தடுக்க இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் தக்காளி விற்பனை செய்த விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்தவர் நரேம் ராஜசேகர ரெட்டி (62). இவர் மதனபள்ளி மண்டலத்தில் உள்ள போடிமல்லடின்னே எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு பால் டெலிவரி செய்ய கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்தனர்.
இதனால் சிறிது நேரத்தில் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜசேகர ரெட்டியின் மனைவி கூறுகையில் பண்ணைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருந்தனர். அவர்கள் தக்காளியை விலைக்கு வாங்க வந்ததாக கூறினார். அவர் தற்போதுதான் கிராமத்தை விட்டு பால் டெலிவரி செய்ய சென்றார் என்றேன் என மனைவி கூறியுள்ளார்.
தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் 20 நாட்களில் ரூ 30 லட்சத்திற்கு தக்காளிகளை ராஜசேகர ரெட்டி விற்பனை செய்ததாக தெரிகிறது. எனவே அந்த பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் இது போன்று செய்திருக்கலாம் என்கிறார்கள். இந்த நிலையில் ராஜசேகர ரெட்டி பால் டெலிவரிக்கு சென்ற போது அவரிடம் ஏதாவது பணம் இருந்ததா என்பதை விசாரித்து வருகிறார்கள்.
அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலையில் 3 முதல் 4 பேர் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. ராஜசேகருக்கு இரு மகள்கள் இருவரும் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகிறார்கள். ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ 120 ஆகும்.












Click it and Unblock the Notifications