மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்ற தம்பதிக்கு என்ன ஆச்சு?.. – டூரிஸ்ட் கைடு சொன்ன பகீர் தகவல்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் சென்ற இந்தூர் புதுமண தம்பதி வழக்கில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. கணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 16 நாட்களாகியும் மனைவியின் நிலை தெரியவில்லை. இந்நிலையில், கடைசியாக அந்த புதுமண ஜோடியை பார்த்த டூரிஸ்ட் கைடு கூறியுள்ள தகவல் பகீர் கிளப்பியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, சோனம் ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். சில்லாங், சோஹ்ரா பகுதியில் உள்ள ஹோம் ஸ்டே விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். கடந்த மே 23 ஆம் தேதி அவர்கள் ரூமை செக் அவுட் செய்துள்ளனர்.

ரூம் செக் அவுட் செய்த சில நிமிடங்களில் அவர்கள் மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுமண தம்பதியின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே கடந்த 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் ஜார்ஜ் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சோனமை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மர்மம் நிறைந்த இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மௌலாகைத் பகுதி டூரிஸ்ட் கைடு ஆல்பர்ட், "மாயமான நாள் அந்த புதுமண தம்பதியை பார்த்ததாக கூறியுள்ளார். அவர்களுடன் 3 ஆண்கள் இருந்தனர். நொங்கிரியாட் எனப்படும் கடினமான மலைப் பகுதியில் ஏறினர்.
ஹனிமூன் ஜோடியும், 3 ஆண்களும் மே 23 ஆம் தேதி காலை 10 மணியளவில் நொங்கிரியாட்டில் இருந்து மௌலாகைத் பகுதிக்கு 3,000 படிகள் ஏறி டிரெக்கிங் சென்றனர். அதற்கு முந்தைய நாள்.. அதாவது மே 22 ஆம் தேதியும் அவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக நான் அணுகினேன். அவர்கள் எனது சர்வீஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பா வன்சாய் என்கிற மற்றொரு கைடை தேர்வு செய்தனர்.
கணவன் உள்ளிட்ட 3 ஆண்கள் முன்னால் செல்ல, அந்தப் பெண் அவர்களை பின் தொடர்ந்து சென்றார். ஆண்கள் இந்தியில் பேசிக் கொண்டனர். எனக்கு காஸி மற்றும் ஆங்கிலம் தான் தெரியும். அதனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. அன்றைய தினம் ஷிப்ரா ஹோம் ஸ்டேவில் தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் வந்தனர். இந்த முறை அவர்களுடன் கைடு இல்லை. நான் மௌலாகைத் அடைந்தபோது அவர்கள் வந்த ஸ்கூட்டரை காண முடியவில்லை." என்று காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுமண தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் சோஹ்ர்ரீம் பகுதியில் கண்டறியப்பட்டது. மௌலாகைத் பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் தான் ஸ்கூட்டர் மீட்கப்பட்டுள்ளது. வண்டி சாவி அதிலேயே இருந்துள்ளது. சோனமின் சகோதரர் கோவிந்த் சில்லாங்கில் தங்கி அவரைத் தேடி வருகிறார். "மாநில அரசு மிகவும் அலட்சியமாக உள்ளது. அவள் இறந்துவிட்டதாக நினைத்து தேடுகிறார்கள்.
சோனம் உயிருடன் தான் இருக்கிறாள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து என் தங்கையை கண்டறிய வேண்டும். அவர்களால் முடியவில்லை என்றால் சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசு விசாரணை அமைப்புகளின் உதவியை நாடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேகாலயா முதல்வர் கொன்ரத் ஷர்மா, மாயமான பெண்ணை கண்டறிவதற்கான நடவடிக்கையில் இருந்து அரசு ஒரு போதும் பின் வாங்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில் கடினமான மலைப்பகுதியில்.. கடுமையான பனிப்பொழிவு.. பலத்த மழை பெய்து வருவதால் சோனமை தேடும் பணி சவாலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications