ஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் 'குன்கா' தீர்ப்பு

அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்து நாடு முழுவதும் தீவிரமாக பேசப்பட்டு வருகிற காலம்.. கடந்த ஆண்டுதான் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி கிரிமினல் அரசியல்வாதிகள் தப்பித்து வந்த சுரங்கப் பாதையை உச்சநீதிமன்றம் ஒழித்துக் கட்டியது.
ஆனாலும் அப்போதைய காங்கிரஸ் அரசு, இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டுவர முயற்சித்தது. பின்னர் அவசர சட்டத்தையே கொண்டுவரவும் களமிறங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்ப பின்வாங்கிக் கொண்டது.
இதனால்தான் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா, இனி 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அவருடைய முதல்வர் பதவியும் பறிபோயிருக்கிறது.
4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி குன்கா, தமது தீர்ப்பில் ரூ100 கோடி அபராதம் விதித்திருப்பதை நிச்சயம் எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த தீர்ப்பு வெளியான நொடியிலேயே ரூ53 கோடிக்கே ரூ100 கோடி அபராதம் எனில் அந்த வழக்குக்கு .. இந்த வழக்குக்கு அபராதங்கள் எவ்வளவு இருக்கும் என்ற வாத பிரதிவாதம் மக்களிடத்தில் மட்டுமே எழுந்திருக்கும் என்று சொல்ல முடியாது.. அத்தகைய வழக்குகளில் சிக்கிய கிரிமினல் அரசியல்வாதிகளிடமும் எழுந்திருக்கவே செய்யும்.
அத்துடன் நாட்டை உலுக்கிய ஊழல் வழக்குகளை ஏன் நீதிபதி குன்காவிடமே ஒப்படைத்துவிடக் கூடாது என்ற ஒரு பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பிரதமரும் இதர மாநில முதல்வர்களும் கிரிமினல்களை அமைச்சராக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி குன்கா வெளியிட்டிருக்கும் தீர்ப்பு, ஊழல்- கிரிமினல் அரசியல்வாதிகள் இனி பொதுமக்கள் பணத்தை சூறையாடுவதை தடுக்கின்ற பிரம்மாஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் விருப்பம்.












Click it and Unblock the Notifications