உ.பியில் விஷ சாராயபலி 42 ஆக உயர்வு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 17 ஆம் தேதி கூரா சவுகான் என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து அக்கம்பக்கத்தில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த பலர் சாராயம் குடித்துள்ளனர். சாராயம் குடித்தவர்களில் நேற்று முன்தினம் வரை 32 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், சாராயம் குடித்தவர்களில் மேலும் 10 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் சிங் உள்பட 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், சாராயம் உற்பத்தி செய்யும் இடங்களில் கடுமையான ஆய்வு நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம், முபாரக்பூர் காவல் நிலைய அதிகாரி விஸ்வநாத் உள்பட 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications