கேரளா, திரிபுராவில் இயல்பு நிலை பாதிப்பு…. மேற்கு வங்கத்தில் சிங்கூர் தினக் கொண்டாட்டம் #bharatbandh
டெல்லி: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகள் சார்பில் இன்று நடைபெற்று வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் இடதுசாரிகள் ஆளும் கேரளா மற்றும் திரிபுராவில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை.
கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால் கடைகள், வங்கிகள் எதுவும் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிக்கள் என எதுவும் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட்டபோதும், போக்குவரத்து முடக்கப்பட்டதால் பணியாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதே போன்று ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் வேலைநிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தைப் போன்றே திரிபுரா மாநிலத்திலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு கடைகள், சந்தைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு வேலைநிறுத்தம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரிகள் அரசு இந்த பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு வேலைநிறுத்தம் வெற்றி பெற்றுள்ளது.
விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடைபெற்றதாக தகவல்கள் எதுவும் இல்லை என்று திரிபுரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்வங்கத்தைப் பொறுத்தவரை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அங்கு மம்தா தலைமையிலான திரினமுல் காங்கிரஸ் அரசு இந்த வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவிக்காததால் வேலை நிறுத்தம் தோல்வியடைந்துள்ளது.
அங்கு அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள் என அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் பல இடங்களில் வேலைநிறுத்தத்தில் இயல்பாகவே பங்கேற்றுள்ளனர். இதனால் மக்கள் நடமாட்டம் சாலைகளில் சற்று குறைவாகவே காணப்பட்டன.
மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் மட்டும் சிறிய அளவில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்றன. இதனையடுத்து இடதுசாரி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் நடைபெறும் இதே நாளை சிங்கூர் தினமாக கொண்டாட வேண்டும் என்றும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா அறிவித்திருந்ததால், அங்கு மக்களின் இயல்பு நிலையில் பாதிப்பில்லை.












Click it and Unblock the Notifications