பப்பு யாதவ் ஆதரவாளர்களின் 'ரயில் வேட்டை'.... பீகாரில் பீதியில் மணிப்பூர்வாசிகள்...
பாட்னா: மணிப்பூரில் பீகார் மாநிலத்தவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பீகாருக்குள் மணிப்பூர் மக்கள் நுழைவதற்கு பப்பு யாதவ் எம்.பி.யின் ஜன் அதிகார் கட்சி தடை விதித்துள்ளது. இதற்காக பீகாரில் பல இடங்களில் ரயில்களை பப்பு யாதவின் ஆதரவாளர்கள் நிறுத்தி மணிப்பூர்வாசிகளை ஒவ்வொரு பெட்டியாக தேடியிருக்கின்றனர். இதனால் பீகாரில் வாழும் மணிப்பூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மணிப்பூர் என்.ஐ.டி.யில் படித்து வரும் பீகார் மாநில மாணவர்களை உள்ளூர் மாணவர்கள் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்களது மாநில மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பீகாரில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுவும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பீகாரில் விஸ்வரூபமெடுத்துள்ளது.
பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பினர் மணிப்பூர் முதல்வரின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் ராஷ்டிரிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பப்பு யாதவ் தனது ஜன் அதிகார் கட்சியினரை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் பீகாரிகள் தாக்கப்பட்டதால் எங்கள் மாநிலத்துக்குள் மணிப்பூர்மக்கள் நுழையவே கூடாது என்று பப்பு யாதவ் தெரிவித்துள்ளார். இதற்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பீகாருக்குள் நுழைந்த ரயில்களை பப்பு யாதவின் ஆதரவாளர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர். அந்த ரயில்களில் மணிப்பூரைச் சேர்ந்த எவரேனும் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களை கட்டாயமாக நடுவழியிலேயே இறக்கிவிடுவோம் என்று எச்சரித்தபடியே ஒவ்வொரு பெட்டியாக பப்பு யாதவின் ஆதரவாளர்கள் சோதனை நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அத்துடன் மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களிலும் மணிப்பூர்வாசிகளை அடையாளம் காணும் முயற்சியில் பப்பு யாதவ் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் இவர்கள் கையில் எவரும் சிக்கவில்லை.
இந்த போராட்டங்களால் பீகாரில் வாழும் மணிப்பூர் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications