செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட சிறுவன் எரித்துக் கொலை!
இந்தூர்: செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவனை, உயர் ஜாதியினர் உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை மூடி மறைத்த போலீசாருக்கு உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், தார் மாவட்டம் அச்சகோடா கிராமத்தைச் சேர்ந்தவர் மாடியா (16). பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இந்த சிறுவன், தனது செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர், சிறுவனிடம் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. உடனே ஆத்திரம் அடைந்த அங்கிருந்தவர்கள் சிறுவன் மாடியாவை அடித்து உதைத்து, கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாகவும், இது போன்ற சம்பவம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு நடக்க கூடாது என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications