பெங்களூர் சிறுவன் உயிரைக் காப்பாற்றிய திருச்சி பெண்ணின் ‘கல்லீரல்’

இறந்த பின்பு மண்ணோ, நெருப்போ தின்னப்போகும் உடல் உறுப்புகளை மூளைச்சாவு அடைந்த நிலையில் மற்றவர்களுக்கு பொருத்துவதன் வாயிலாக மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
அதிலும், உடல் உறுப்புத் தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில், பிறவியிலேயே கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்ட சிறுவன் ஒருவனுக்கு திருச்சி பெண்ணின் கல்லீரல் பொருத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் அக்ஷய், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கும் மேலாக மாற்று கல்லீரல் வேண்டி, பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தான். இந்நிலையில், திருச்சியில் விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் அவனுக்காக பரிந்துரைக்கப் பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சையின் பலனாக மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தற்போது குணம்டைந்து பள்ளி சென்று வரும் அக்ஷய், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளான்.
கடினமான அறுவைச் சிகிச்சை மூலம் தனது மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கும், கல்லீரல் தானம் செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர் அக்ஷயின் பெற்றோர்கள்.












Click it and Unblock the Notifications