மம்தாவுக்கு சொந்த கட்சி எம்.பியே குட்டு! "எனக்கும் மகள் இருக்கிறாள்.." டாக்டர் போராட்டத்திற்கு ஆதரவு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்யப்பட்டதற்கு எதிரான நள்ளிரவு போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுகேந்து சேகர் ரே தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அவர் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்படடார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் கழுத்து எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். முழு செயல்முறையும் வீடியோ மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின்போது அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் உடனிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் இன்று இரவு வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இரவு 11.55 மணிக்கு தொடங்கும் இந்தப் போராட்டம், "பெண்களின் சுதந்திரத்திற்காக, சுதந்திரத்தின் நள்ளிரவில்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் அதிகமான மக்கள் கலந்துகொள்வதால் புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. ஆண்களும் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர். நடிகர் ஸ்வஸ்திகா முகர்ஜி, நடிகர் சுர்னி கங்குலி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பிரதிம் டி குப்தா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் தங்களுக்கு வசதியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் நள்ளிரவு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டதற்கு எதிரான நள்ளிரவு போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுகேந்து சேகர் ரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவ மாணவிக்கு ஆதரவான போராட்டக்காரர்களுடன் நாளை நான் சேரப் போகிறேன். மில்லியன் கணக்கான வங்காள குடும்பங்களைப்போல எனக்கும் ஒரு மகள் மற்றும் சிறிய பேத்தி உள்ளனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நாம் எழுந்து நிற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போதும். எது வந்தாலும் வரட்டும். ஒன்றாக இதனை எதிர்ப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எக்ஸ் பயனாளி ஒருவர் தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்ததற்காக மூத்த தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அவர், "தயவுசெய்து எனது தலைவிதியைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் ரத்தம் என் நரம்புகளில் ஓடுகிறது. இதுகுறித்து எனக்கு கொஞ்சம் கூட கவலையில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications