தலைவர் முதல் தொண்டர்கள் வரை.. திரிபுராவில் ஒட்டு மொத்த காங்கிரஸை கபளீகரம் செய்த பாஜக
திரிபுராவில் காங்கிரஸ் கட்சி அப்படியே இப்போது பாஜகவாகிவிட்டது. மாநில செயல் தலைவரும் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகிறாராம்.
அகர்தலா: திரிபுராவில் காங்கிரஸின் மாநில தலைவர் தொடங்கி அக்கட்சியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து இடதுசாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது பாஜக.
திரிபுராவைப் பொறுத்தவரையில் கால் நூற்றாண்டுகாலமாக இடதுசாரிகள் ஆட்சி இருந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
ஆனால் காங்கிரஸின் டெல்லி மேலிடம் இடதுசாரிகளுடன் மென்மைப் போக்கை கடைபிடிக்கிறது என்பது திரிபுரா தலைவர்களின் குற்றச்சாட்டு. இதனால் காங்கிரஸ் பிரமுகர்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர்.

பாஜக ஒரே சாய்ஸ்
அங்கேயும் இடதுசாரிகளுடன் மென்மையான அணுகுமுறை மமதா கையாள்கிறார் என்கிற அதிருப்தி எழுந்தது. இதனால் இடதுசாரிகள், காங்கிரஸைத் தவிர்த்து பாஜகதான் அதிருப்தியாளர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.

10,000க்கும் அதிகமானோர் ஐக்கியம்
பாஜகவும் இந்த அதிருப்தியை அறுவடை செய்து வருகிறது. இதுவரை 45 முறை மத்திய அமைச்சர்கள் திரிபுராவுக்கு சென்று திரும்பியுள்ளனர். இதன் விளைவாக கடந்த 2 ஆண்டுகளில் 10,000க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக தொண்டர்களாகிவிட்டனர்.

விரைவில் பாஜகவில் ஐக்கியம்
இப்போது மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருப்பவர் மகாராஜா கிரித் பிரத்யோத் டேப் பர்மன் மானிக்யா. மகாராஜாவின் குடும்பமும் அவரது ஆதரவாளர்களும் காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர்.

இடதுசாரிகளுக்கு மாற்று பாஜக
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக காங்கிரஸ் தொண்டர்களை வளைத்துக் கொண்டிருந்த பாஜக இப்போது செயல் தலைவர் டேப் பர்மனுக்கும் வலை விரித்துவிட்டது. இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, திரிபுரா பொறுப்பாளர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஆகியோர் டேப் பர்மனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். டேப் பர்மனைப் பொறுத்தவரையில், இடதுசாரிகள்தான் எங்களது எதிரிகள். ஆகையால் அவர்களை வலிமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது என தெளிவுபடுத்தி இருக்கிறார். தற்போதைய நிலையில் திரிபுரா மாநில காங்கிரஸ் என்பது அப்படியே திரிபுரா மாநில பாஜக என பெயர் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications