அடுத்த குறி! அஜ்மீர் தர்காவும் கோயிலாம்... சிவலிங்கம் இருப்பதால் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை
ஜெய்பூர்: உலக புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவை கோயில் என்றும், அதற்கு அடியில் சிவலிங்கம் இருப்பதால் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் இந்துத்துவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது சூபி காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்கா. இது பரவலாக அஜ்மீர் தர்கா என்று அழைக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் இந்த தர்கா 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு நடைபெறும் உருஸ் திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து சன்னி பிரிவு முஸ்லிம்கள் வருகை தருவது வழக்கம்.

தர்காவுக்கு சால்வை அனுப்பும் பிரதமர் மோடி
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 810 ஆம் ஆண்டு உருஸ் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்த சால்வை சமாதியின்மீது போர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் என பல மதத்தவர்கள் இந்த தர்காவுக்கு வருகை தந்து வழிபடுகிறார்கள். அதேபோல் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வருகிறார்கள்.

தர்காவுக்கு அடியில் சிவலிங்கம்
இந்த நிலையில் அஜ்மீர் தர்காவுக்கு அடியில் சிவலிங்கம் இருந்ததாகவும், முற்காலத்தில் அது கோயிலாக இருந்ததாகவும் மஹாரானா பிரதாப் சேனா அமைப்பை சேர்ந்த ராஜ்வர்தன் சிங் பார்மர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜ்மீர் தர்காவின் சுவற்றிலும் ஜன்னல்களிலும் இந்து மத சின்னங்கள் பொறிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். குறிப்பாக ஸ்வஸ்திக் சின்னம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அஜ்மீர் தர்காவில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்களும் வழிபடுகிறார்கள்
ராஜ்வர்தனின் இந்த கோரிக்கைக்கு அஞ்சுமான் சையத் ஜத்கான் அமைப்பின் தலைவர் மொயின் சிஸ்டி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். "அஜ்மீர் தர்காவில் அவர் சொல்வதை போல் எந்த விதமான இந்து மத சின்னங்களும் இல்லை. அடிப்படை ஆதாரமற்ற தகவலை ராஜ்வர்த்தன் கூறி இருக்கிறார். ஆண்டுதோறும் அஜ்மீர் தர்காவுக்கு கோடிக்கணக்கான இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த மக்கள் வருகை தருகிறார்கள்.

மத ஒற்றுமையை சீரழிக்கும் செயல்
ஸ்விஸ்திகா சின்னம் தர்காவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை முழு பொறுப்புணர்வுடன் நான் இங்கு சொல்கிறேன். 850 ஆண்டுகளாக தர்கா இதே இடத்தில்தான் உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்ற கேள்வியே எழுந்தது கிடையாது. நமது நாட்டில் இதுவரை ஏற்படாத ஒரு சூழல்தான் தற்போது நிலவி வருகிறது. இது மதங்களை கடந்து தர்காவில் வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை துன்புறுத்தும் செயல். இதுபோன்றவர்களுக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் இதுபோன்று கருத்துக்களை சிலர் தெரிவிக்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications