ராஜஸ்தானில் சூறாவளியாக கிளம்பிய கெஜ்ரிவால்.. திடீரென கூண்டுக்கிளியாகி.. கடைசியில் ஆஃப் ஆனது ஏன்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டுள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரமே செய்ய போகவில்லை.. சூறாவளி போல் புறப்பட்டவர் ஏன் அமைதியாக இருந்தார் என்பதை பார்ப்போம்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 25-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் தபால் வாக்குகளின் படி, காங்கிரஸ் கட்சியைவிட பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதன் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனாலும் கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்துக்கு நேரில் போகவே இல்லை. இத்தனைக்கும் டெல்லியிலும், பக்கத்து மாநிலமான பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பக்கத்தில் உள்ள ராஜஸ்தான் தேர்தலில் பிரச்சாரத்திற்கு கூட கெஜ்ரிவால் போகவில்லை. பஞ்சாபின் முதல்வரான பக்வந்த் மான் கடந்த ஜுன் மாதம் கங்காநகர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு, முதல்வர் கெஜ்ரிவால் கடந்த செப்டம்பரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஜெய்ப்பூரில் நடத்தினார். அவ்வளவு தான் அதன்பிறகு பிரச்சாரத்திற்கு கெஜ்ரிவால் போகவே இல்லை..
ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளரான வினய் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் மீது கடும் விமர்சனங்களை கிளப்பியவர். ஆனால் தேர்தலின் போது அமைதியாக கடந்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான நவீன் பாலிவாலும் பெரிய அளவில் கெலாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை, ராஜஸ்தான் தேர்தலில் ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாமல் இருந்தது.
கடந்த முறை குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை ஆம் ஆத்மி தான் காலி செய்தது. ஆம் ஆத்மியால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் சில ஆயிரம் வாக்குகளில் தோற்றனர். இந்த சூழலில், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு ஆதராவாக இருப்பதாக தோற்றம் நிலவியது. ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் கெஜ்ரிவால் நெருக்கடியில் இருக்கிறார்.
தேசிய அளவில் எதிர்கட்சிகள் அமைத்த இண்டியா கூட்டணியின் உறுப்பினராக உள்ள ஆம் ஆத்மி, மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவியதாகவே பார்க்கப்படுகிறது. புயலாக புறப்பட்ட கெஜ்ரிவால் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளி போல் டெல்லியிலேயே இருந்து வருகிறார்.
டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்குப் பின் மதுபான வரி விலக்கு அளித்த ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலின் பெயரும் அடிபடத் துவங்கியதால் அதில் இருந்து தப்பிக்க தீவிரமாக வேலை செய்த காரணத்தால் ராஜஸ்தான் பக்கமே கெஜ்ரிவால் போகாமல் இருந்தார்.












Click it and Unblock the Notifications