பாஜக கூட்டணியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
ஹைதராபாத்: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தனித்து போட்டியிட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ்.தான் ஆதிக்கம் செலுத்தும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அக்கட்சி தெலுங்கானாவில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளில் 11ஐ கைப்பற்ற வாய்ப்புள்ளது என்பது எக்ஸிட் போல் முடிவுகள்.

பிஜூ ஆதரவு உறுதி
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவளிக்கக் கூடும் என்பது ஏறத்தாழ உறுதியாக இருக்கிறது.

அதிமுக நாளை முடிவு
அதிமுகவைப் பொறுத்தவரையில் நாளைதான் கருத்து தெரிவிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கு முன்னதாக பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்ததற்காக அதிமுக முன்னாள் எம்.பி. மலைச்சாமியை ஜெயலலிதா கட்சியில் இருந்தே நீக்கியும் உள்ளார். இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ன நிலை எடுக்கும் என்று கேள்வியும் உள்ளது.

ஐமு, மூன்றாவது அணிக்கே ஆதரவு
அக்கட்சியைப் பொறுத்தவரையில் முதலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத்தான் ஆதரவு தர முன்னுரிமை கொடுப்போம். அது ஆட்சி அமைக்காது போனால் மூன்றாவது அணிக்கு ஆதரவளிப்போம். நிச்சயம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கமாட்டோம் என்று அதன் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார்.

நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு இல்லை
இந்நிலையில் அவரது மகளும் கட்சியின் மூத்த தலைவருமான கவிதாவும் இன்று தெலுங்கானாவின் சமூக அமைப்பு சூழலை எங்கள் கட்சி மனதில் வைத்துக் கொண்டுதான் முடிவெடுப்போம். அதனால் நிச்சயமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கமாட்டோம் என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காரணம் இதுதான்..
இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக முஸ்லிம்களும் ராஷ்டிரிய சமிதியுடன் இணைந்து போராடினர். அவர்களும்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வெற்றிக்கு முக்கிய காரணம். அதனால் பாஜக அணியில் இணைவதை அக்கட்சி விரும்பவில்லை என்பதுதானாம்.
அதே நேரத்தில் பாஜகவிடம் பேரம் பேசி நல்ல கேபினட் இடங்களைப் பெறவே எடுத்த எடுப்பிலேயே டி.ஆர்.எஸ் இவ்வாறு பேசுவதாகவும் சில அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications